<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஞானக்கூத்தன் படைப்புகள்</title>
	<atom:link href="http://www.gnanakoothan.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.gnanakoothan.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 26 Dec 2011 02:34:46 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>கனவு பல காட்டல் 14</title>
		<link>http://www.gnanakoothan.com/2011/10/22/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be14/</link>
		<comments>http://www.gnanakoothan.com/2011/10/22/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be14/#comments</comments>
		<pubDate>Sat, 22 Oct 2011 12:57:48 +0000</pubDate>
		<dc:creator>ஞானக்கூத்தன் படைப்புகள்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.gnanakoothan.com/?p=355</guid>
		<description><![CDATA[மரபும் மங்கல நாணும் மரபு எத்தனையோ வகைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. முன்னோர்களால் முதலில் நிர்மாணிக்கப்பட்டது. காலம் காலமாகத் தொடர்ந்து வர மரபு அதைப் பின்பற்றுபவர்களால் போற்றப்பட்டுவருகிறது. சில மரபுகள் மீறப்பட்டால் தண்டனையும் பரிகாரமும் உண்டு. அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளே மரபினால் நிர்ணயிக்கப்படுவதால் மனித மனத்தின் ஆழத்தில் மரபு பதிவு கொள்கிறது. மரபைப் பின்பற்றும்போது மன நிறைவும் மீறும்போது, பின்பற்றாதபோது பயமும் மன உறுத்தலும் ஏற்படுகிறது. இதனால் மரபை மாற்றுகிறவர்கள், மீறுபவர்கள் ஆகிய இருவரிடத்திலேயும் எதிர்ப்பும் கோபமும் உண்டாகிறது. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><strong>மரபும் மங்கல நாணும்</strong></p>
<p>மரபு எத்தனையோ வகைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. முன்னோர்களால் முதலில் நிர்மாணிக்கப்பட்டது. காலம் காலமாகத் தொடர்ந்து வர மரபு அதைப் பின்பற்றுபவர்களால் போற்றப்பட்டுவருகிறது. சில மரபுகள் மீறப்பட்டால் தண்டனையும் பரிகாரமும் உண்டு. அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளே மரபினால் நிர்ணயிக்கப்படுவதால் மனித மனத்தின் ஆழத்தில் மரபு பதிவு கொள்கிறது. மரபைப் பின்பற்றும்போது மன நிறைவும் மீறும்போது, பின்பற்றாதபோது பயமும் மன உறுத்தலும் ஏற்படுகிறது. இதனால் மரபை மாற்றுகிறவர்கள், மீறுபவர்கள் ஆகிய இருவரிடத்திலேயும் எதிர்ப்பும் கோபமும் உண்டாகிறது. இந்தக் கோபம் கவிதையில் வெளிப்படத்தான் செய்கிறது. ஒன்று கருத்தாகவோ அல்லது கவிதாபாத்திரத்தின் செயலாகவோ இது வெளியாகிறது. பெண் கவிஞர்களில் வத்ஸலாவின் கவிதைகளில் இப்படிப்பட்ட உணர்வைப் பார்க்கலாம். &#8216;எறும்பூர&#8217; என்ற கவிதையில் வத்ஸலா</p>
<p style="padding-left: 30px;">பூ, மஞ்சள், தாலி, குங்குமம் ஆகிய<br />
பெண்மையின் யூனிஃபார்மணிந்து<br />
ஏறுகிறேன் ரயிலில்</p>
<p>என்று எழுதுகிறார். இதில் &#8216;யூனிஃபார்ம்&#8217; என்ற சொல்லாட்சியில் கோபம் கொப்பளிக்கிறது. பூ, மஞ்சள், தாலி, குங்குமம் என்ற நான்கு பொருள்களின் மதிப்பையும் இச்சொல் குறைக்க முயல்கிறது. &#8216;ஏறுகிறேன் ரயிலில்&#8217; என்ற பயணக் குறிப்பிலும் விரக்தியும் வேதனையும் ஒன்றாகின்றன. இந்தப் பயணம் பெண்களால் மட்டுமே அனுபவிக்கப்படும் ஒரு பயணம். புகுந்த வீட்டுக்குப் போகும் முதல் பயணம். இப்பகுதியில் குறிப்பிடப்பட்ட தாலி மற்றொரு கவிதையில்</p>
<p style="padding-left: 30px;">அழுக்கு மஞ்சள் கயிறு</p>
<p>என்று வர்ணிக்கப்படுகிறது. தாலி ஒரு கயிறுதான். ஸம்ஸ்கிருதத்தில் இது &#8216;மங்கல ஸூத்ரம்&#8217; என்று சொல்லப்படுகிறது. &#8216;ஸூத்ரம்&#8217; என்றால் நூல். ஆனால் இது நிகழ்ச்சியின் சிறப்பால் தாலி என்ற பெயர் பெறுகிறது. நிகழ்ச்சியின் பொருட்டு ஒரு பொருளுக்கு மற்றொரு பெயரிடப்படுவதும் மரபுதான். இந்தப் பெயரைக் குறிப்பிடாமல் வெறுமனே &#8216;கயிறு&#8217; என்று கவிதாபாத்திரம் குறிப்பிடுவதால் அந்தப் பொருளின் மதிப்பு குறைக்கப்படுகிறது அல்லது இறக்கப்படுகிறது என்பது தெளிவு. இந்த இறக்கத்தை &#8216;இழப்புகள்&#8217; என்ற கவிதையில் வத்ஸலா அதிர்ச்சி தருகிற முறையில் காட்டுகிறார். அதிர்ச்சிக்குக் காரணம் இக்கவிதைப் பகுதியில் ஆளப்படும் &#8216;குற்ற உணர்வின்றி&#8217; என்ற தொடர்தான்.</p>
<p style="padding-left: 30px;">எனக்குள் இருந்த என்னையோ<br />
காணவே காணோம்<br />
எஞ்சியிருப்பது<br />
அடி மனதில் கனன்றெரியும் தழலும்<br />
நீ இல்லாத சமயங்களில்<br />
குற்ற உணர்வின்றி<br />
கட்டிலின் மேல் நான் கழற்றி வைக்கும்<br />
நீ கட்டிய தாலியும்தான்.</p>
<p>தாலியை &#8216;நீ கட்டிய தாலி&#8217; என்று குறிப்பிடுவது இயல்பாகக் கூறியே கோபத்தைக் காட்டும் யுக்தியாகப் படுகிறது. வத்ஸலா காட்டும் பெண் வஞ்சிக்கப்பட்டவளாகத் தெரிகிறாள். ஆனால் தாலியை இரவில் தூங்கப் போகுமுன் கழற்றி வைத்துவிடுவது தற்போது பரவலான பழக்கம்தான் என்று நம்பப்படுகிறது.</p>
<p>ஆனால் ரா. ஸ்ரீநிவாசனின் &#8216;பொட்டு&#8217; என்ற கவிதையில் காட்டப்படும் பெண் வித்யாசமானவள். அவள் அபலை – பலமற்றவள். அவளுக்கு இருந்துவரும் ஒரு பலம் எப்போது போகுமோ என்ன ஆகுமோ என்ற நிலையில் உள்ளது. ஆனால் அவளிடம் ஒரு பண்பாட்டு உணர்வு அவளை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. ஒரு வினோதமான முறையில். அந்தப் பெண்ணைக் கவிஞர் வருணிக்கிறார்.</p>
<p style="padding-left: 30px;">(&#8230;)<br />
கழுத்தில் முத்துக் கோர்த்த<br />
கருமணி மாலையோடு<br />
சாளரம் வைத்த ரவிக்கையும்<br />
வாவென்று அழைக்கும்.</p>
<p>எதற்கு அழைக்கிறாள்?</p>
<p style="padding-left: 30px;">நெற்றியில் எழுதி ஒட்டப்படவில்லை<br />
என்றாலும் அவளைக் கண்டால்<br />
ஐயமறத் தெரியவரும்</p>
<p>என்ன தெரியவருகிறது?</p>
<p style="padding-left: 30px;">பாய்ந்து ஒளிவாள்<br />
போலீஸ்காரரைக் கண்டால் மட்டும்<br />
குற்ற மன்றங்களில்<br />
கட்டிய அபராதத்திற்குக்<br />
கணக்கில்லை அவள் வசம்&#8230;</p>
<p>அவளைப் பற்றிய ஒரு சோகமான செய்தியைக் கவிஞர் தருகிறார். கவிதை முடிவை நோக்கிப் போகும்போது வருகிறது அந்தச் செய்தி.</p>
<p style="padding-left: 30px;">இரவில் இருப்பிடம்<br />
திரும்பும் போது<br />
பரிசுச் சீட்டுகள்<br />
அலுக்காமல் பெறுகிறாள்.</p>
<p>வாழ்க்கை திடீரென ஒரு விடிவுக்காலத்தைக் காட்டாதா என்ற ஏக்கம் அவளுக்கு. &#8216;அலுக்காமல்&#8217; என்ற சொல் சீட்டு விற்பவனுக்கு அவளிடம் உரையாடும் அளவுக்குப் பரிச்சயம் இருப்பதை நியாயப்படுத்துகிறது.</p>
<p style="padding-left: 30px;">ஏதோவொன்று அவளிடம்<br />
குறைந்திருக்கக் கண்டு<br />
சீட்டு விற்பவன்<br />
வியப்புடன் கேட்டான்<br />
நெற்றிக்குப் பொட்டு<br />
இட்டுக் கொள்வதில்லையா?</p>
<p>அவள் தனது வெறும் நெற்றியைத் தொட்டபடி சொல்கிறாள்</p>
<p style="padding-left: 30px;">அவள் சொன்னாள் பெருமிதம் பொங்க<br />
மரித்துவிட்ட கணவன் நினைவாய்ப்<br />
பொட்டு மட்டும் இட்டுக் கொள்வதில்லை.</p>
<p>இந்தப் பெண்ணின் இழப்பு எப்படி எதிர்கொள்ளப்படுகிறது. எவ்வளவு சிக்கல். ரா. ஸ்ரீநிவாஸன் இக்கவிதையைத் திறம்பட எழுதியிருக்கிறார்.</p>
<p style="text-align: center;">•</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.gnanakoothan.com/2011/10/22/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be14/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கனவு பல காட்டல் 13</title>
		<link>http://www.gnanakoothan.com/2011/10/22/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be13/</link>
		<comments>http://www.gnanakoothan.com/2011/10/22/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be13/#comments</comments>
		<pubDate>Sat, 22 Oct 2011 12:53:55 +0000</pubDate>
		<dc:creator>ஞானக்கூத்தன் படைப்புகள்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.gnanakoothan.com/?p=353</guid>
		<description><![CDATA[உடுத்துக் களைந்த பீதக ஆடை உடுத்தி&#8230; காளிதாஸ் கவிதைகளில் மறைவு பற்றிய உரையாடல் தெளிவாகக் கேட்கக்கூடிய ஒன்று. தமிழிலக்கிய வரலாற்றிலேயே மரணம் பற்றி அதிகமாக சிந்தித்தது எழுதியது புதுக்கவிதைதான். சற்று கூர்ந்து பார்த்தால் புதுக்கவிதை சார்பாக மரபுக் கவிதை குறித்து சிலர் வைத்த விமரிசனமே மரபுக் கவிதை துதிப் பாடல்களாக, விழாப் பாடல்களாக மாறிவிட்டன என்பதுதான். இப்படிப்பட்ட பாடல்களை எழுதுகிறவர்கள் அவர்கள் புதுக்கவிதையின் பக்கமாகப் பொதுவாக அறியப்பட்டாலும் புதுக்கவிஞர்களால் மதிக்கப்படுகிறவர்களாக இருப்பதில்லை. இதைப் போலவே புதுக்கவிதைக்கெதிராக மரபுக் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p style="text-align: center;"><strong>உடுத்துக் களைந்த பீதக ஆடை உடுத்தி&#8230;</strong></p>
<p>காளிதாஸ் கவிதைகளில் மறைவு பற்றிய உரையாடல் தெளிவாகக் கேட்கக்கூடிய ஒன்று. தமிழிலக்கிய வரலாற்றிலேயே மரணம் பற்றி அதிகமாக சிந்தித்தது எழுதியது புதுக்கவிதைதான். சற்று கூர்ந்து பார்த்தால் புதுக்கவிதை சார்பாக மரபுக் கவிதை குறித்து சிலர் வைத்த விமரிசனமே மரபுக் கவிதை துதிப் பாடல்களாக, விழாப் பாடல்களாக மாறிவிட்டன என்பதுதான். இப்படிப்பட்ட பாடல்களை எழுதுகிறவர்கள் அவர்கள் புதுக்கவிதையின் பக்கமாகப் பொதுவாக அறியப்பட்டாலும் புதுக்கவிஞர்களால் மதிக்கப்படுகிறவர்களாக இருப்பதில்லை. இதைப் போலவே புதுக்கவிதைக்கெதிராக மரபுக் கவிதையினர் 1960களில் சொன்ன விமரிசனம்  &#8216;புதுக்கவிதை சோகத்தைப் போற்றுகிறது, அழுமுகமாக இருக்கிறது&#8217; என்பதுதான். இரண்டு நிலைகளும் உண்மை என்றே சொல்ல வேண்டும். சாவு பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். க.வை. பழனிச்சாமியின் ஒரு தொகுப்பே சாவைப் பற்றிப் பேசியது. காளிதாஸ் கவிதைகள் பல மறைவைப் பற்றிப் பேசியவை. காளிதாஸின் பல கவிதைகளில் ஆடை பற்றிய குறிப்பு கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் ஆடை இறப்புத் தொடர்பாக நினைவு கொள்கிறது. வீட்டுக்குள் ஒரு கல்வெட்டு என்ற கவிதையில்</p>
<p style="padding-left: 30px;">தாத்தாவின் வைப்பாட்டி வீடு<br />
சாயக்காரர் தெருவில்</p>
<p>என்று குறிப்பிடுகிறார். &#8216;சாயக்காரர் தெரு&#8217; என்பது சேலைகளுக்கு சாயம் ஏற்றுவார் வாழும் தெருவைக் குறிக்கும். அந்தக் காலத்தில் &#8216;பிள்ளை பிடிப்பு&#8217; என்ற வதந்தி ஊர்மக்களை அச்சுறுத்தும். தாய், குழந்தையைப் பிள்ளை பிடிக்கிறவன் வருகிறான் என்று பயமுறுத்துவாள். இது வதந்தி என்றாலும் பயமாக இருக்கும். இந்த வதந்தி பரவினால்தான் சேலையில் சாயம் பிடிக்கும் என்றும் சொல்வார்கள். இந்த வதந்தி சாயக்காரர் தெருவில் இருந்துதான் எழும்.</p>
<p>வேறு மாதிரியான &#8216;கடவுள்கள்&#8217; என்ற கவிதையில் பூசாரிகளுக்கு சில வீட்டில் வேட்டிகளை எடுத்துக் கொடுப்பதைக் காளிதாஸ் குறிப்பிடுகிறார். நார்மடிப் புடவைகள் பற்றியும் காளிதாஸ் எழுதியிருக்கிறார்.</p>
<p style="padding-left: 30px;">நாமரிகிப் பாட்டிக்கு எப்போதும்<br />
மூன்று நார்மடிப் புடவை உபயோகத்தில்</p>
<p>என்று தொடங்குகிறது காளிதாஸின் &#8216;நார்மடிப் புடவைகள்&#8217; என்ற கவிதை. பிராமண விதவைகளின் உடை பற்றி இக்கவிதை அழகாகக் கூறுகிறது. நார்-மடி என்ற இரண்டு சொற்களாலானது இந்தப் பெயர். பட்டு வஸ்திரத்தைப் போலவே – உண்மையைச் சொன்னால் அதைவிட – தூய்மையானதாக ஆசாரவாதிகளால் கொள்ளப்படுகிறது. நார் – தாவரங்களின் நார். &#8216;மடி&#8217; என்ற சொல் மிகப் பழமையான தமிழ்-திராவிடச் சொல். &#8216;மடி&#8217; இன்று பிராமணர்களிடம் அதிகமும் வழங்கப்படுகிறது. பிராமண விதவைகள் யதிகளுக்கு &#8211; ஒருவகைத் துறவிகள் – இணையாகக் கருதப்பட்டார்கள். எனவே அவர்கள் ஆண் போல மயிர்நீக்கம் செய்தார்கள். விரதங்கள் மேற்கொண்டார்கள். மதிக்கப்பட்டார்கள். தலைமுடி களைந்து, நார்மடிப் புடவை உடுத்தவர்கள் பெற்ற மதிப்பு மற்ற விதவைகள் பெறவில்லை. &#8216;மடி&#8217; என்ற சொல் துவைத்து பிறர் சரீரத்தில் படாமல் உலர்த்தி ஒருவர் கட்டிக்கொள்ளும் வேட்டி அல்லது சேலையைக் குறிக்கிறது. புறநானூற்றில் கூட இச்சொல் இடம்பெற்றிருக்கிறது.</p>
<p>&#8216;இறந்தவனின் ஆடை&#8217; என்ற தலைப்பில் மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதையும் முக்கியத்துவம் உள்ளது. &#8216;ஆள் பாதி ஆடை பாதி&#8217; என்ற கவிதையில் தேவதச்சன் &#8216;வேர்வை ஆடை நேற்றில் விழுகிறது. துவைத்த ஆடைகள் நாளையில் விழுகின்றன&#8217; என்று குறிப்பிடுகிறார். காளிதாஸ் எழுதிய &#8216;நார்மடிப் புடவைக&#8217;ளும் மனுஷ்யபுத்திரனின் &#8216;இறந்தவனின் ஆடை&#8217; காலம் தாண்டிக் கிடக்கின்றன.</p>
<p>ஆடைகள் காலப் போக்கில் உடம்பை மறைப்பதற்கு என்பதோடு அதன் ஒரு முனை பொருள்களை எடுத்துச் செல்லவும் பயன்படத் தொடங்கிவிட்டன. இடுப்பில் செருகப்படும் ஆடையின் பகுதி வெற்றிலைப் பாக்கு, சிறிய, பெரிய அளவிலான தொகையைப் பத்திரப்படுத்தும் அறையாகவும் மாறிவிட்டது. பணத்தை &#8216;மடிப்பணம்&#8217; என்று குறிப்பிடுவதுண்டு. &#8216;மடியில் கனமிருந்தால் வழியில் பயம்&#8217; என்ற பழமொழியில் மடி என்ற சொல் பணத்துக்கு ஆகுபெயராகியிருக்கிறது. முந்தானையும் பெண்களுக்குப் பொருள்களைப் பத்திரப்படுத்தும் அறையாகிவிட்டது. முந்தானையில் முடிந்துகொள்வது என்ற வழக்கும் ஏற்பட்டுள்ளது. முந்தானையை விரிப்பது என்ற தொடர் பெண் தன் விருப்பத்தைக் கூறுவதைக் குறிப்பிடுகிறது. முனியப்பராஜின் கவிதையில் ஒரு கிழவர்</p>
<p style="padding-left: 30px;">தோள் துண்டில் முடிந்த<br />
மண் ஒட்டிய வேர்க்கடலை</p>
<p>வைத்திருக்கிறார். &#8216;நிகழ்தகவு&#8217; என்ற கவிதையில் முனியப்பராஜ் &#8216;கோயிலோர சங்குப் பூ தேடிப் போனாலும் / சாணித் தட்டெடுத்து கம்பங்காடு போனாலும் / அடி முந்தானையிலிருக்கும் கைமுறுக்கு நான்&#8217; என்று வாசகனை அசரவைக்கிறார். ஆனால் எல்லாருடைய கவிதைகளிலும் ஆடை விஷயம் வரும்போது சோகத்தின் மெல்லிய இழை ஜரிகை போல் பார்வையில் படுகிறது. &#8216;நிற மாலை&#8217; என்ற அழகான கவிதையை இப்படி முடிக்கிறார் முனியப்பராஜ்.</p>
<p style="padding-left: 30px;">நிறக் குடுவையிலிருந்து<br />
சாயப் பட்டறைக்கும்<br />
நெசவிலிருந்து அக்காவிற்கும்<br />
நெய்தாகிறது புடவை<br />
தட்டித் தட்டி சரியான நேரத்தில்<br />
கூடைக்குள் எறிகையில்<br />
நழுவி விழுகிற பந்தைப் போல்<br />
கனவும் நழுவுகிறது</p>
<p>பல வகைக் கொடைகளில் &#8216;ஆடைக் கொடை&#8217; தொன்று தொட்டே மக்கள் பண்பாட்டு நிகழ்வுகளில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. பிறந்த நாளிலிருந்து இறந்த நாள் வரை தொடரும் ஆடை உறவின் அடையாளமாகிவிட்டது. கவிஞர் ஆசு &#8216;உயிர்க் கசிவு&#8217; என்ற கவிதையில்</p>
<p style="padding-left: 30px;">அழுக்குத் தாவணியை<br />
அலசிக் கட்டவும்<br />
ஓய்வற்ற<br />
உழைப்புப் பெண் நீ</p>
<p>என்ற உழைப்பாளிப் பெண்ணைப் பற்றி ஒருவன் கூறுகிறான். &#8216;பிணை&#8217; என்ற கவிதையில் ஆசு கேட்கிறார்.</p>
<p style="padding-left: 30px;">செத்த பின்னும்<br />
தாய் வீட்டுக் கோடிக்காய்<br />
காத்திருக்கும் சவத்துக்குச்<br />
சுடுகாடு எவ்வுறவில் சேரும்?</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.gnanakoothan.com/2011/10/22/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be13/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கனவு பல காட்டல் 1</title>
		<link>http://www.gnanakoothan.com/2011/07/27/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be1/</link>
		<comments>http://www.gnanakoothan.com/2011/07/27/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be1/#comments</comments>
		<pubDate>Wed, 27 Jul 2011 16:26:05 +0000</pubDate>
		<dc:creator>ஞானக்கூத்தன் படைப்புகள்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.gnanakoothan.com/?p=339</guid>
		<description><![CDATA[தமிழ்க் கவிதையில் நவீனத்தின் உதயம் பிரதாப முதலியார் சரித்திரத்தில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அனந்தையன் என்ற பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த அனந்தையன், நாவல் வழியாக அறிமுகமாகும் ஆங்கில நூல்கள் படித்த முதல் தமிழன். வேத விரோதமான நூல்களைப் படித்துக் கெட்டுப்போன மனிதநாக வேதநாயகம் பிள்ளை அவனை சித்தரிக்கிறார். அவன் படித்த நூலாசிரியர்களின் பெயரையும் அவர் தந்திருக்கிறார். அனந்தையன் ஆங்கிலம் படித்தவனே தவிர அதில் எழுத முயன்றவன் இல்லை. வேதநாயகம் பிள்ளை ஆங்கிலத்தில் எழுதியவர்களைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>தமிழ்க் கவிதையில் நவீனத்தின் உதயம்</strong></p>
<p>பிரதாப முதலியார் சரித்திரத்தில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அனந்தையன் என்ற பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த அனந்தையன், நாவல் வழியாக அறிமுகமாகும் ஆங்கில நூல்கள் படித்த முதல் தமிழன். வேத விரோதமான நூல்களைப் படித்துக் கெட்டுப்போன மனிதநாக வேதநாயகம் பிள்ளை அவனை சித்தரிக்கிறார். அவன் படித்த நூலாசிரியர்களின் பெயரையும் அவர் தந்திருக்கிறார். அனந்தையன் ஆங்கிலம் படித்தவனே தவிர அதில் எழுத முயன்றவன் இல்லை. வேதநாயகம் பிள்ளை ஆங்கிலத்தில் எழுதியவர்களைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. அவருடைய நாவல் வெளியான ஆண்டு 1879 வரை ஆங்கில மொழியில் படைப்பாக்கம் செய்த தமிழர்கள் இல்லை போலும். ஆனால் இந்திய அளவில் பார்க்கப்போனால் மற்ற இந்திய மொழிகளில் பிறந்தவர்கள் ஆங்கிலத்தில், இலக்கியத்தில் படைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். 1829ம் ஆண்டு தொடங்கி 1947 முடிய ஆங்கிலத்தில் எழுதி வெளியிடப்பட்ட கவிதைகளின் தொகுப்பை யூனிஸ் டி சௌஸா வெளியிட்டிருக்கிறார்.</p>
<p>1809ல் பிறந்து 1832ல் மறைந்த ஹென்றி தொராஸியோதான் ஆங்கிலத்தில் உருவாகும் இந்தியக் கவிதை என்ற வினோதத்தைத் தொடஹ்கிவைத்தார் என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் வெளியான இந்த இந்தியக் கவிதைகளைப் படிக்கும்போது இந்திய மொழிகளில் நவீன கவிதை உதயமாவதற்கு இக்கவிதைகளே முன்னோடியாக அமைந்தவை என்று சொன்னால் தவறாகாது. &#8216;டு இந்தியா &#8211; மை நேடிவ் லேண்ட்&#8217;, &#8216;லைன்ஸ் டு அன் இன்ஃபண்ட்&#8217;, &#8216;நைட்&#8217; முதலிய கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வாழ்ந்த காலத்திலேயே கவனிப்புப் பெற்ற கவிஞராக ஹென்றி தெரோஸியோ இருந்திருக்கிறார்.</p>
<p>காசிப்ரஸாத் கோஷ் (1803-1873) என்ற வங்காளக் கவிஞர் &#8216;ஆங்கிலத்தில் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்ட முதல் ஹிந்து&#8217; என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் இவர் ஒரு ஹிந்துவைப் போல் அல்லாமல் 14 வயதுக்குத்தான் ஆரம்பக் கல்வி பெறப் போயிருக்கிறார். &#8216;இளம் விதவைக்கு&#8217; என்ற இவர் கவிதை 1830ல் வெளியாகியிருக்கிறது. &#8216;பாலைவனத்துப் பூப்போலத் தனிமைப்பட்டவவள் நீ&#8217; என்று தொடங்குகிறது இக்கவிதை. காசிப்ரஸாதின் &#8216;த ஃபேர்வெல் சாங்&#8217; என்ற கவிதை நெகிழ்வைத் தருகிறது. இந்திய மற்றும் பிரிட்டிஷ் நவிற்சி முறைகளைப் பின்பற்றி அமைந்துள்ளது இக்கவிதை. ஆங்கிலத்தில் பின் எதுகை அமைப்பு பல சமயங்களில் அற்புதமாக இருக்கும். இக்கவிதை அப்படிப்பட்டது.</p>
<p style="padding-left: 30px;">Where Surya from his throne above<br />
With brightest colours paints the day</p>
<p>என்ற வரிகளில் &#8216;சூரியன்&#8217; என்ற சொல் இயல்பாக அமைந்து, அடுத்த வரியை கம்பீரமும் அழகும் உடையதாக்குகிறது. &#8216;செப்டம்பரில் சந்திரன்&#8217; என்ற கவிதையும் &#8216;இறந்துபோன ஒரு காக்கைக்கு&#8217; என்ற கவிதையும் காசிப்ரஸாதின் பெருமைக்குப் பங்களிப்பவை. இந்தக் கவிதையைப் படித்ததும் என்னுடைய &#8216;செத்துப் போன பறவை&#8217; கவிதை நினைவுக்கு வந்தது. &#8216;செப்டம்பரில் சந்திரன்&#8217; கார்காலத்து நிலவைப் பற்றிக் கூறுகிறது. தேவதைகள் அமிழ்தத்தை ஒளித்துவைக்கும் இடமாக உன்னைத்தான் கொண்டார்கள் என்று இந்திய புராண மரபைக் கவிதையில் சேர்த்துக்கொள்கிறார் கவிஞர்.</p>
<p>கோவின் சுந்தர் தத் (1828-1884) ஒரு கவிதையை விசாகப்பட்டினத்தைப் பற்றி எழுத எடுத்துக்கொண்டிருக்கிறார். கிறிஸ்துவராக மாறிய ஒரு ஹிந்து தன் மனைவிக்கு சொல்வதாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். &#8216;வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்&#8217; என்ற தலைப்பில் ஒரு கவிதையை இவர் எழுதியிருக்கிறார். வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதை முழுத் தொகுப்பு தமிழ்நாட்டிலும் வழங்கியிருக்கிறது. எனக்கு 1954ல் ஒரு தொகுப்பு கிடைத்தது. ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த ஒருவரிடம் வேர்ட்ஸ்வொர்த்தின் பல கவிதைகளைப் படிக்கக் கொடுத்து நான் தாழ்மையுடன் கேட்டிருக்கிறேன். 1960களில் ரா.ஸ்ரீ. தேசிகன் அவர்களிடமும் கேட்டிருக்கிறேன். பாரதியார் ஷெல்லிதாஸன் என்று ஒரு சமயம் புனைபெயர் சூட்டிக்கொண்டார் என்றாலும் ஷெல்லியின் கவிதை குறித்து எதுவும் எழுதவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கீட்ஸ் என்ற மூன்று கவிஞர்களும் தமிழ்க் கவிதை உலகில் 1950 வரை மூன்று வகைக் கவிதைகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்தார்கள் என்று சொல்லலாம். இவர்களில் கீட்ஸின் கவிதைகளை விரும்பியவர்கள் அதிகம் என்று சொல்லலாம். அந்நிய மொழிக் கவிஞர்களில் க.நா.சு.வைக் கவர்ந்தவர் எட்கர் ஆலன் போ. க.நா.சு. ஆலன் போ பற்றி ஒரு கவிதையும் எழுதியிருக்கிறார். சுந்தர் தத் &#8216;கங்கை மீது இரவு&#8217; என்ற கவிதையில் &#8216;சூரிய ஒளி சுட்டிக் காட்டிய குறைகளிலிருந்து பொருள்களை விடுவித்த&#8217;தாக நிலவைக் குறிப்பிடுகிறார்.</p>
<p>கிரீஸ் சுந்தர் தத் (1833-1892) கவிதைகளில் வேப்பமரம், குருவி முதலிய நமது ஆர்வத்தைத் தணிக்கின்றன. ராமசர்மா (1837-1918)வின் கவிதைகளில் &#8216;த ஜாலி பெக்கர்ஸ் (பிச்சைக்காரர்கள்)&#8217; என்ற கவிதை நகைச்சுவையை முயல்கிறது. &#8216;எ ப்ரேயர்&#8217; என்ற கவிதையில் சர்மா அவதாரங்களைப் பிரஸ்தாபிக்கிறார்.</p>
<p>தோரு தத் (1856-1877) சற்றுக் கூடுதலாக அறியப்பட்ட பெண் எழுத்தாளர். மற்ற கவிஞர்கள் சில மரங்களைப் பற்றி எழுதியிருப்பது போல இவர் சவுக்கு மரத்தைப் பற்றிக் கவிதை எழுதியுள்ளார். இந்த மரத்தின் அடியில் இளமைப் பருவத்தில் விளையாடியிருப்பதைக் குறிப்பிடுகிறார். தமிழச்சியின் &#8216;மஞ்சணத்தி&#8217; நமது நினைவில் வந்து போகிறது. மஞ்சணத்தி மட்டுமல்ல, நற்றிணையின் புகழ்மிக்க கவிதை ஒன்றுகூட. ஒரு கருத்து, ஒரு காட்சி பல மொழிகளில் வெளிப்பட்டிருக்குமானால் அது உலகளாவியது என்று சொல்லலாம். வால்ட் விட்மனின் &#8216;யூ&#8217; மரம், பெருமாள் முருகனின் &#8216;பனைமரம்&#8217;, நஞ்சுண்டனின் &#8216;விடுமுறை நாளில் அனுவாகம்&#8217; முதலான கவிதைகளும் மனதில் நிழலாடுகின்றன.</p>
<p>இந்திய ஆங்கிலக் கவிதைகள் 19ம் நூற்றாண்டிலேயே தலைபோகிற விஷயங்களைப் பேசத் தொடங்கிவிட்டன என்பதற்கு ஜோசப் பர்த்தோ (1872-1947) கவிதைகளைக் குறிப்பிடலாம். இவர் கோல்ட்ஸ்மித் கவிதையில் ஆதர்சம் கொண்டவர். &#8216;பிராமணப் பெண்&#8217;, &#8216;பறைப் பெண்&#8217;, &#8216;தள்ளி வைக்கப்பட்ட மனைவி&#8217; முதலான கவிதைகள் நமக்கு மகிழ்ச்சியைத் தருபவை.</p>
<p>இத்தொகுப்பில் மற்றொரு பிரபலமான கவிஞரின் கவிதை இடம்பெற்றுள்ளது. அவர் சரோஜினி நாயுடு (1879-1949). 1895ல் ஓர் ஆங்கிலேயர் சரோஜினி நாயுடுவிடம் &#8216;இங்கிலாந்தைப் பற்றி எழுதுவதை நிறுத்திவிட்டு இந்தியாவைப் பற்றி எழுதுங்கள்&#8217; என்று சொன்னாராம். 1913ல் சரோஜினி நாயுடுவின் வீட்டுக்கு எஸ்ரா பௌண்ட் விருந்தினராக வந்திருக்கிறார். ஆனால் பௌண்டின் நவீனத்வ கவிதை முயற்சிகள் நாயுடுவைக் கவரவில்லை.</p>
<p>கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதிய தி. அண்ணாஜி நமது கவனத்தைப் பெரிதும் கவர்கிறார். இவர் யார், என்ன செய்தார் என்ற விவரங்கள் கிடைக்கவில்லையாம். ஆனால் இவர் 1912ல் துண்டுப் பிரசுரமாக வெளியிட்ட &#8216;த லைட் ஹவுஸ்&#8217; என்ற கவிதை ஆச்சரியமாக இருக்கிறது. இக்கவிதையை 1912ல் விவேகானந்தா ப்ரஸ், மெட்ராஸ் வெளியிட்டிருக்கிறது. சென்னை கடற்கரையில் ஒரு கலங்கரை விளக்கம் இருப்பதைக் குறித்து ஒரு கவிஞரும் தமிழில் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அண்ணாஜி ஒரு நீண்ட கவிதையையே எழுதி வெளியிட்டிருக்கிறார். &#8216;தொலைவில் ட்ராம் வண்டிகளின் கிறீச்சிடல்களும் கடந்து செல்லும் வண்டித் தொடர்களின் சப்தமும்&#8217; கேட்பதாக அண்ணாஜி எழுதுகிறார். மேலும்</p>
<p style="padding-left: 30px;">மணலில் நூற்றுக்கணக்கானவர்கள்<br />
குழுமுகிறார்கள். ஆனால்<br />
அவர்கள் நடுவில் நான் தனியனாய்<br />
உணர்கிறேன்</p>
<p>என்று அண்ணாஜி எழுதுகிறார். இவர் சொல்லும் கடற்கரை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எதிரில் என்று தோன்றுகிறது. 1912ல் சென்னை உயர்நீதி மன்றத்தின் பிரதான கோபுரத்தில்தான் கலங்கரை விளக்கு அமைந்திருந்தது. அண்ணாஜியின் லைட்ஹவுஸ் அதுதான். அண்ணாஜி தேச விடுதலை உணர்வு கொண்டவர். கிறிஸ்துவ மத எதிர்ப்பும் உள்ளவர்.</p>
<p style="padding-left: 30px;">என்னுடைய தேசத்தின் கடவுள்களை<br />
என்னிடம் திருப்பிக் கொடுங்கள்</p>
<p>என்றும்</p>
<p style="padding-left: 30px;">என்னுடைய கடவுள்கள்<br />
என்னிடம் இறந்துவிட்டார்களா?<br />
கிடையாது<br />
அவர்கள் நெருப்பு மெல்லக் கனல்கிறது</p>
<p>என்றும் எழுதுகிறார் அண்ணாஜி. இவருடைய &#8216;த பாய்காட்&#8217; என்ற கவிதை ஹிந்து நாளிதழில் 1906ல் வெளியாகியிருக்கிறது.</p>
<p>யூனிஸ் டி சௌஸாவின் தொகுப்பைக் கவனிக்கும்போது இந்தியக் கவிதையின் நவ உதயம் முதலில் ஆங்கில மொழியில் உருவாகியதென்றால் உண்மைதான். அண்ணாஜி பாரதிக்கு சமகாலத்தவர். தமிழின் நவீன கவிதை கூட முதலில் ஆங்கில மொழியில் உதயம் கொண்டதாகக் கூறலாம். அதுவும் &#8216;வசன கவிதை&#8217;. அதன் ஆசிரியர் யார்? நீங்கள் யூகிக்க முயல்வது போல சுப்ரமணிய பாரதியாரா? இல்லை.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.gnanakoothan.com/2011/07/27/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be1/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கனவு பல காட்டல் 12</title>
		<link>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be12/</link>
		<comments>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be12/#comments</comments>
		<pubDate>Mon, 04 Jul 2011 17:40:14 +0000</pubDate>
		<dc:creator>ஞானக்கூத்தன் படைப்புகள்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.gnanakoothan.com/?p=336</guid>
		<description><![CDATA[படைப்பாளிகள் தங்கள் வாழ்க்கையிலிருந்து சில நிகழ்ச்சிகளை, செய்திகளை, போதங்களைத் தங்கள் படைப்புகளுக்கு தானமாகக் கொடுத்திருப்பார்கள். இந்த சுயசரிதை தானத்தை க.நா.சு., நகுலன், ஜி. நாகராஜன், அசோகமித்திரன், தி. ஜானகிராமன் இன்னும் பல எழுத்தாளர்களின் படைப்பிலே காணலாம். காளி-தாஸ் என்ற பெயரில் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் &#8216;மரபுகள்&#8217; என்ற கவிதையில் இப்படியொரு சுயசரிதை தானம் செய்தவரோ என்று நினைக்கிறேன். &#8216;மரபு&#8217; என்ற விஷயத்தில் எப்படி எல்லாம் சிந்தனை போகக்கூடும் என்றும் இக்கவிதையைக் கொண்டு பார்க்கலாம். மரபு என்ற தலைப்பில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>படைப்பாளிகள் தங்கள் வாழ்க்கையிலிருந்து சில நிகழ்ச்சிகளை, செய்திகளை, போதங்களைத் தங்கள் படைப்புகளுக்கு தானமாகக் கொடுத்திருப்பார்கள். இந்த சுயசரிதை தானத்தை க.நா.சு., நகுலன், ஜி. நாகராஜன், அசோகமித்திரன், தி. ஜானகிராமன் இன்னும் பல எழுத்தாளர்களின் படைப்பிலே காணலாம். காளி-தாஸ் என்ற பெயரில் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் &#8216;மரபுகள்&#8217; என்ற கவிதையில் இப்படியொரு சுயசரிதை தானம் செய்தவரோ என்று நினைக்கிறேன். &#8216;மரபு&#8217; என்ற விஷயத்தில் எப்படி எல்லாம் சிந்தனை போகக்கூடும் என்றும் இக்கவிதையைக் கொண்டு பார்க்கலாம். மரபு என்ற தலைப்பில் உள்ள இக்கவிதை ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழத் திட்டமிட்டு அப்படியே வாழத் தொடங்குகிறார்கள்.</p>
<p style="padding-left: 30px;">ஆன்றோர் யாரும்<br />
தாம்பூலம் மாற்றிக்கொள்ளவில்லை<br />
நானும் அவளும் தீர்மானித்தோம்<br />
இணைந்து<br />
கணவன் மனைவியாய் வாழலாம்</p>
<p>கவிதையின் முதல் வரியே இக்கல்யாணம் வீட்டுப் பெரியவர்கள் முடிவு செய்த கல்யாணம் இல்லை என்று சொல்லிவிடுகிறது. &#8216;ஆன்றோர்&#8217; இக்கல்யாணத்தில் சம்பந்தப்படவில்லையாதலால் இது மரபுக்கு ஏற்புடையதல்ல என்றாகிவிட்டது. &#8216;கல்யாணநிகழ்ச்சி&#8217; கிடையாது; அழைப்பிதழ் கிடையாது; சத்திரம், வரவேற்பு. விருந்து கிடையாது. மாலை மாற்றம் கிடையாது. கூரைப் புடவை இல்லை. தாலியும் கிடையாது. ஆனால் அவர் &#8216;நண்பர்களிடம் மனைவியாய்&#8217; அறிமுகம் செய்கிறார். ஆனால் நண்பர்கள்</p>
<p style="padding-left: 30px;">வாழ்த்தவில்லை யாரும் வாய் திறந்து<br />
அவளை பற்றிய விபரங்களும் கோரவில்லை.</p>
<p>காளிதாஸ் இந்த நண்பர்களைப் பற்றிப் பொருமுகிறார். ஊர் கூடி தாலி கட்டிக் கல்யாணம் செய்துகொண்டவர்களுக்கென்றால் இவர்கள் மேடையேறிப் பரிசு கொடுப்பார்கள். போட்டோ  பிடித்துக்கொள்வார்கள். பரிமாறப்பட்ட இனிப்பைக் கண்டு முறுவலிப்பார்கள் என்று அவர்களது செயல்களைக் குறை போலக் கூறுகிறார் இந்த மனிதர். தன்னைப் பார்க்க வரவுமில்லை, பரிசு தரவுமில்லை என்கிறார் இக்கவிதையின் கடைசிப் பகுதிதான் காளிதாஸின் ஆத்திரம் எப்படிப்பட்டதென்று காட்டுகிறது.</p>
<p style="padding-left: 30px;">எழுதும் கவிதைகளில் இவர்கள்<br />
மரபுகள் வெட்டிச் சாய்த்தவர்கள்<br />
மா கவிஞர்கள் &#8211; உண்மையில்<br />
ஆயினும் பாவம்<br />
தேடி வர இலக்கியப் பரிசு<br />
காத்து நிற்போர்தான் ஜன்னலின் பின்னால்.</p>
<p>காளிதாஸ் கவிஞர்கள் என்று குறிப்பிட்டிருப்பது மரபை மீறிய கவிஞர்கள். அதாவது&#8230;? புதுக்கவிஞர்கள். இக்கவிஞர்கள் தாங்கள் எழுதும் கவிதைகளில் மரபுகளை வெட்டிச் சாய்த்தவர்கள். கவிதைகளில்தான் மரபுகளை வெட்டிச் சாய்த்தவர்களே தவிர நடைமுறை வாழ்க்கையில் அப்படிப்பட்டவர்கள் அல்லர் என்கிறது கவிதை.</p>
<p>கவிதையின் முதல் பகுதியில் அந்த மனிதரது &#8216;திருமணம்&#8217; ஒரு நிகழ்ச்சி அல்ல என்று தெளிவாகக் கூறப்பட்டுவிட்டது. சேர்ந்து வாழ நினைத்ததாகக் கூறுபவர் அந்தப் பெண்ணை &#8216;மனைவி&#8217; என்ற சொல்லைக் கொண்டுதான் அறிமுகப்படுத்துகிறார். கவிதையின் தொடக்கத்தில் பல &#8216;இல்லை&#8217;கள் கூறப்பட்டுள்ளன. இந்த நிலைமையில் ஒரு பெண்ணை</p>
<p style="padding-left: 30px;">&#8216;அழைத்துப் போய் நண்பர்களிடம்&#8217;</p>
<p>மனைவியாய் அறிமுகம் செய்தால் அந்த நண்பர்கள் எப்படி எதிர்ச் செயல்பட முடியும்? அழைத்துப் போய் என்றால் எங்கே அழைத்துப் போய்? &#8216;நண்பர்கள்&#8217; எல்லோரும் ஓரிடத்தில் இருந்தார்களா? ஆமென்றால் எந்த இடத்தில் இருந்தார்கள்? அந்த இடம் நண்பர்கள் சும்மா இருந்துவிட்டதற்குக் காரணமாகிவிட்டிருக்குமா? மேலும் அந்த மனிதரை வாழ்த்தியிருக்க வேண்டும் என்று காளிதாஸ் விரும்புவது ஏன்? மரபு மீறுபவர்கள் என்பவர்களில் பலர் ஒரு மரபை மீறினாலும் வேறு சில மரபுகளைப் பின்பற்றுபவர்களாகவே இருப்பார்கள். ஒருவரை வாழ்த்துவதும் பரிசளிப்பதும் கூட மரபு வழிப்பட்டதுதானே. கல்யாண மனிதர் மறந்துவிட்டிருக்கிறார். இலக்கியப் பரிசைக் காத்து நிற்பதைக் கண்டிக்கத் தகுந்ததாகக் காட்டிக் கவிதை முடிகிறது. பெண்ணோடு சேர்ந்து வாழும் வகையை ஒருவர் தேர்ந்தெடுத்தது மரபு மீறல் ஆகுமா? ஆண்-பெண் சம்பந்தப்படாத நிகழ்வானால் அவரது மனோபாவம் எப்படியிருக்கும்? காளிதாஸ் இக்கவிதையில் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் திருமண சம்பந்தமான யதார்த்த நிலையைத் தெளிவாக்கியிருக்கிறார். வைதீகத் திருமணம் கூட இக்காலத்தில் வைதீகர்களுக்கு மட்டும் என்றில்லாமல் அது பல திருமண முறைகளில் ஒரு திருமண முறையாக மாற்றப்பட்டுவிட்டது. பிறப்பால் கிறிஸ்துவர்களாக இருந்தவர்கள் வைதீக முறைப்படி திருமணம் செய்துகொள்வதை யாரும் எதிர்த்துவிடவில்லை. இங்கும் மௌனம்தான் காக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய மணம் ஒரு நிகழ்ச்சியாக்கப்படுவதால் அந்த மரபுக்குரிய மற்ற விஷயங்கள் அதைச் சூழ்ந்துகொள்கின்றன.</p>
<p>காளிதாஸ் மரபு விஷயமாக வேறு சில செய்திகளைத் தனது கவிதையில் எழுதியிருக்கிறார். அதுவும் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be12/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கனவு பல காட்டல் 11</title>
		<link>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be11/</link>
		<comments>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be11/#comments</comments>
		<pubDate>Mon, 04 Jul 2011 17:36:18 +0000</pubDate>
		<dc:creator>ஞானக்கூத்தன் படைப்புகள்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.gnanakoothan.com/?p=333</guid>
		<description><![CDATA[ஐம்பெரும் பூதங்களைக் கணக்கிடும்போது &#8216;ஐப்பு&#8217; என்று தொடங்குவார்கள். &#8216;ஐப்&#8217; என்ற வடசொல்தான் தமிழில் ஐப்பு. அப்பு என்றால் தண்ணீர் என்று பொருள். &#8216;அப்பிலே தோய்த்திட்டு நாமதனைத் தப்பினால்&#8217; என்று இரட்டைப் புலவர்களில் ஒருவர் பாடினார். &#8216;தண்ணீரில் தோய்த்து&#8217; என்று இந்தத் தொடர் பொருள் தருகிறது. தமிழில் &#8216;அப்பழுக்கு&#8217; என்ற தொடரும் உண்டு. அப்பழுக்கு என்றால் தண்ணீரால் ஏற்படும் கறை. துணியில் மற்ற மறைகளைப் போக்கினாலும் தண்ணீர் தனது கறையைத் துணியில் ஏற்றிவிடுகிறது. இந்த அப்பழுக்கைப் பற்றி வறுமை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஐம்பெரும் பூதங்களைக் கணக்கிடும்போது &#8216;ஐப்பு&#8217; என்று தொடங்குவார்கள். &#8216;ஐப்&#8217; என்ற வடசொல்தான் தமிழில் ஐப்பு. அப்பு என்றால் தண்ணீர் என்று பொருள். &#8216;அப்பிலே தோய்த்திட்டு நாமதனைத் தப்பினால்&#8217; என்று இரட்டைப் புலவர்களில் ஒருவர் பாடினார். &#8216;தண்ணீரில் தோய்த்து&#8217; என்று இந்தத் தொடர் பொருள் தருகிறது. தமிழில் &#8216;அப்பழுக்கு&#8217; என்ற தொடரும் உண்டு. அப்பழுக்கு என்றால் தண்ணீரால் ஏற்படும் கறை. துணியில் மற்ற மறைகளைப் போக்கினாலும் தண்ணீர் தனது கறையைத் துணியில் ஏற்றிவிடுகிறது. இந்த அப்பழுக்கைப் பற்றி வறுமை வசப்பட்ட இரண்டொரு சங்கப் புலவர்கள் தங்கள் பாட்டில் சொல்லியிருக்கிறார்கள். &#8216;என்னுடைய சிதார்&#8217; &#8211; ஆடை &#8216;பாசி பிடித்தது போல் ஆகிவிட்டது. அதைக் களைந்து கொள்ள எனக்கு வேறு ஆடை மன்னன் கொடுத்தான்&#8217; என்று ஒரு புலவர் பாடியிருக்கிறார். தனது ஆடையை மன்னனிடமிருந்தே புலவர் பெற்றதாகக் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தகுந்தது. ஆடை என்ற சொல் எப்போது அலங்காரம் என்ற சொல்லுடன் இணைந்து வரக்கூடியது. அப்படியே துணிமணி என்பதும் கூட. &#8216;ஆள் பாதி ஆடை பாதி&#8217; என்ற பழமொழியும் உண்டு. வள்ளுவரும் நட்பைப் பற்றி எழுதும்போது &#8216;உடுக்கை&#8217; பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அருவி திருமாலின் உத்தரியம் போல் இருக்கிறது என்று ஒரு பக்தர் வர்ணித்திருக்கிறார். நல்ல ஆடை சீரான வாழ்க்கையைக் காட்டுவதாகவும் கந்தல் ஆடை வறுமையைக் காட்டுவதாகவும் கருதப்படுகிறது. சேலை கிழிவது போலக் கிழியக் கூடியதல்ல எனது பாட்டு என்று சீறினார் இடைக்காலத்து அவ்வையார்.</p>
<p>இந்திய ஓவியங்களும் சிற்பங்களும் அந்தந்தக் காலத்து மக்கள் அணிந்த ஆடைகளை சித்தரிக்கின்றன. கௌதம புத்தர், மகாவீரர் இவர்களது ஆடையை சிற்பங்கள் நன்றாக வெளிப்படுத்துகின்றன. இவர்கள் உடுத்தியிருப்பது போலவே பல நூற்றாண்டுகளாக இந்திய மக்கள் உடுத்தியிருந்தார்கள் என்று சொல்லலாம். தங்களின் ஆடையை வேட்டி என்றும் பெண்களின் ஆடையை &#8216;சேலை&#8217; என்றும் குறிப்பிடுவது தமிழ்ப் பொது வழக்கு. வேட்டி எப்போதும் நிறமற்று வெள்ளையாகவே இருந்துவந்திருக்கிறது. பெண்களின் ஆடை வண்ணம் ஊட்டப்பட்டிருக்கிறது. &#8216;வண்ண நீலச் சிற்றாடை&#8217; என்றார் அவ்வையார். &#8216;பட்டுக் கருநீலப் புடவை&#8217; என்றார் பாரதியார். உடை அணிகிற முறையும் உடுத்தியிருப்பவரின் ஜாதியைக் காட்டுவதாகவும் இருந்தது. ஆசாரமாக இருக்கும்போது ஒருவிதமாகவும் சாதாரணமாக இருக்குக்ம்போது ஒருவிதமாகவும் வேட்டி இன்று உடுத்தப்படுகிறது. நீண்ட காலம் வரை வெள்ளையாக இருந்த வேட்டி ஏதோ ஒருகட்டத்தில் சாயம் ஏற்றப்பட்டிருக்கிறது. வேட்டி &#8216;சாய வேட்டி&#8217; ஆயிற்று.</p>
<p>சாய வேட்டி வெள்ளை வேட்டியின் மையத்தில் பெரிய வட்ட வடிவமாக சிவப்பு நிறம் பூசப்பட்டதாக இருந்தது. சாய வேட்டி பல மக்களால் விரும்பப்பட்டு உடுத்தப்பட்டது. குறிப்பாக அம்மன் கோயில் பூசாரிகளால் உடுத்தப்பட்டது. க.நா.சு.வின் &#8216;பொய்த்தேவு&#8217; நாவலின் கதாநாயகன் சோமசுந்தரம் தனது எஜமானனை சாய வேட்டி வாங்கித் தரும்படி கோருகிறான். சோமசுந்தரம் அப்போது சிறுவன். எனவே சிறுவர்களின் ஆசைக்குரிய வேட்டியாக இருந்திருக்கிறது சாய வேட்டி. ஆனால் சாய வேட்டி 1950க்குப் பிறகு தனது சிறப்பை இழந்துவிட்டது. சோமசுந்தரம் சாய வேட்டிக்கு ஆசைப்பட்டதாகக் கூறும் பொய்த்தேவு நாவல் 1940ல் எழுதப்பட்டது. 1960களின் இடையில் வரை இதை நான் மக்களிடம் பார்த்திருக்கிறேன். அப்புறம் மறைந்துவிட்டது. சாய வேட்டியை இலக்கியம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் நாட்டுப் பாடல் அதைக் கண்டுகொண்டதோடு பொருட்செறிவோடு பாடுகிறது.</p>
<p style="padding-left: 30px;">சாய வேட்டி கட்டாதிய &#8211; ஒங்க<br />
சதுரத்துக்கு  நல்லால்லே<br />
வெள்ளை வேட்டி கட்டி வாங்க<br />
வெளுப்பாருந்தா நல்லாருக்கும்</p>
<p>சாய வேட்டி கட்ட வேண்டாம் என்று மன்றாடுகிறாள் காதலி. இன்னும் ஒரு முறையும் அந்தப் பாட்டில் அதைச் சொல்கிறாள். சாய வேட்டிக்குப் பதிலாக &#8216;மல்லு வேட்டி&#8217; கட்டும்படி அவள் சொல்கிறாள்.</p>
<p>சாய வேட்டி இன்று முற்றிலுமாக மறைந்துவிட்டது. வெள்ளை வேட்டிதான் ஆட்சி செய்கிறது. சுற்றிலும் கறுப்பாகவும் நடுவில் சிவப்பு வட்டமாகத் தெரியும் திராவிடர் கழகத்துக் கொடிபோல நடுவில் சிவப்புச் சுற்றலும் வெண்மையுமான சாய வேட்டியை இன்றைக்கு யார் கட்டுவார்? ஆடை என்ற ஒன்று நூற்றாண்டுகளாக மனிதனால் போற்றி அணியப்படுகிறது. இது தொடர்கிறது. அணிகலன்களுக்கும் இதே நிலைமைதான். கம்மல், தோடு, மிளிரும் காலத்தில் காதோலை அணியலாமா? கைவளையை விடத் தோள்வளை சங்க காலத்தில் கூடுதலாக மதிக்கப்பட்டதை நற்றிணைப் பாட்டொன்று சொல்கிறது. மாற்றங்களை ஏற்று ஒரு விஷயம் தொடர்வதைத்தான் மரபு என்கிறது தொல்காப்பியம். இப்படி விளக்குகிறார் நச்சினார்க்கினியர். நான்கு வகைப் பாக்களில் ஒன்றான கலிப்பாவில் வரும் &#8216;கொச்சகம்&#8217; என்பது சொசுவம் என அறியப்பட்ட ஒன்றுதான் என்கிறார் உரையாசிரியர்.</p>
<p>&#8216;மரபு&#8217; என்பது அவ்வக்காலத்து மாற்றங்களை ஏற்றுக்கொண்டு &#8211; பழையன கழிந்து &#8211; செய்யுள் இயற்றுதல் என்கிறார் நச்சினார்க்கினியர். &#8216;செய்யுள்&#8217; என்றுதானே அவர் சொன்னார் என்று யாராவது சொல்லக்கூடும். ஆம், சொன்னார். செய்யுள் என்றால் செய்யப்படுவது என்று பொருள். அதில் சீர் தளை வேண்டும் என்று சொல்லப்பட்டதில்லை.</p>
<p>மேலே நாம் பார்த்த நாட்டுப் பாடலில் காதலி கடைசியாக ஒரு வேண்டுகோள் செய்கிறாள்:</p>
<p style="padding-left: 30px;">மதினி வார நேரமாச்சு<br />
ஒத்த வேட்டிய கட்டாதிய&#8230;</p>
<p>மதினி என்பவள் மச்சினி. ஒத்த வேட்டி என்பது நான்கு முழ வேட்டி. அவள் ஏன் அப்படிக் கேட்டுக்கொண்டாள்? ஆடையின் அளவுக்கும் நல்ல நடத்தைக்கும் உள்ள தொடர்பை சுட்டிக்காட்டுகிறது நாட்டுப் பாடல். புரிகிறதா?</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be11/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கனவு பல காட்டல் 10</title>
		<link>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be10/</link>
		<comments>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be10/#comments</comments>
		<pubDate>Mon, 04 Jul 2011 17:33:22 +0000</pubDate>
		<dc:creator>ஞானக்கூத்தன் படைப்புகள்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.gnanakoothan.com/?p=331</guid>
		<description><![CDATA[சத்திய நாராயணனின் கவிதைகளிலும் வெளிநாட்டுக் குளிர் பேசப்படுகிறது. வீட்டின் ஒட்டடைகளைக் குளிர்காலத்தின் வருகைக்குள் அடை&#8230; தமிழ்நாட்டின் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு சொல்லப்படுவதை நினைவூட்டுகிறது இந்த வரி. மழைக்காலத்தில் வெளியே செல்ல முடியாது என்பதால் ஜீவராசிகள் உணவைச் சேமித்து வைக்கும் என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. நண்டுகள் தங்கள் புழைகளில் வெள்ளம் நுழைந்துவிடாமல் இருக்கும்படி பாதுகாப்பாகப் புழையின் வாயிலை அடைத்துக்கொள்ளும் என்று கம்பர் கூறுகிறார். மழைக்காலத்துக்கு முன்பு வீட்டுக் கூரையை மாற்றுவதும் ஓடுகள் மாற்றுவதும் உண்டல்லவா? நாடு விட்டு நாடு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>சத்திய நாராயணனின் கவிதைகளிலும் வெளிநாட்டுக் குளிர் பேசப்படுகிறது.</p>
<p style="padding-left: 30px;">வீட்டின் ஒட்டடைகளைக் குளிர்காலத்தின்<br />
வருகைக்குள் அடை&#8230;</p>
<p>தமிழ்நாட்டின் மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு சொல்லப்படுவதை நினைவூட்டுகிறது இந்த வரி. மழைக்காலத்தில் வெளியே செல்ல முடியாது என்பதால் ஜீவராசிகள் உணவைச் சேமித்து வைக்கும் என்று இலக்கியம் குறிப்பிடுகிறது. நண்டுகள் தங்கள் புழைகளில் வெள்ளம் நுழைந்துவிடாமல் இருக்கும்படி பாதுகாப்பாகப் புழையின் வாயிலை அடைத்துக்கொள்ளும் என்று கம்பர் கூறுகிறார். மழைக்காலத்துக்கு முன்பு வீட்டுக் கூரையை மாற்றுவதும் ஓடுகள் மாற்றுவதும் உண்டல்லவா? நாடு விட்டு நாடு சென்று வாழும் நிலைமை குறித்த உணர்வுக் குறிப்புகள் உள்ள கவிதைக்கும் சத்திய நாராயணன் கவிதைத் தொகுப்பில் உண்டு. தன் இடத்தை விட்டு வேறிடத்துக்குத் தன்னுடைய விருப்பத்தின்பேரில் சென்றிருந்தாலும் கூடப் பிரிவு பற்றிய சோகம் இவர் கவிதையில் காணப்படுகிறது. சில இயந்திரங்களின் செயல்களைக் குறிப்பிடும்போது ஏதோ ஒரு விதத்தில் ஒரு கொடுமையைத் தொனிக்க விரும்பும் காரியமாக அது படுகிறது. &#8216;கடிதம்&#8217; என்ற கவிதையில்</p>
<p style="padding-left: 30px;">இதுகாறும் ஒழித்த குப்பைத் தாள்களைப்<br />
பன்னூறு துண்டங்களாய் வெட்டிய இயந்திரம்<br />
வாய் திறந்து காத்திருக்கிறது.<br />
&#8230; &#8230;<br />
இயந்திரத்தின் பற்களுக்குள் நுழைக்கும் முன்<br />
உறைந்த சடலத்தின் கைக்கடிகாரம் போல்<br />
கடைசி உளி<br />
உயிர்ப்புடன் துடிக்கிறது</p>
<p>என்று இயந்திரம் மனுஷ்யத் தன்மை பெற்றுவிடுகிறது. அதே போல் கடிதத்தின் கடைசி வரி &#8216;உயிர்ப்புடன்&#8217; துடிக்கிறது. அசைவு, இயக்கம் என்ற விஷயம் இயந்திரத்தில் காணப்பட்டாலும் அதுவும் ஒருவகை உயர்திணை. இயல்புடையதாகக் காட்டப்படுகிறது. கவிதை ஓர் அமானுஷ்யக் கொடுமையை சித்தரிக்கிறது.</p>
<p>தட்பவெப்ப நிலைகளை மட்டுமல்லாமல் வெளிநாட்டுத் தாவரங்களும் அயலகத் தமிழ்க் கவிதைகளில் வளர்கின்றன. &#8216;ஒன்றுமில்லை&#8217; என்ற கவிதையில்</p>
<p style="padding-left: 30px;">சுழன்றடிக்கும் காற்றில்<br />
என் பாதங்களுடன் ஓடிவரும்<br />
காய்ந்த மேப்பில் இலைகள்</p>
<p>என்ற வரிகள் இறுக்கத்தை மீறி வாசகனிடம் மெல்லிய புன்னகையை வரவழைக்கின்றன. &#8216;எச்சம்&#8217; என்ற கவிதையில் ஒரு மேப்பில் மரம்:</p>
<p style="padding-left: 30px;">கடைசி இலையையும்<br />
உதிர்த்துவிட்ட<br />
மேப்பில் மரம்<br />
குளிர் காற்றை அறைந்து<br />
எதிரொலிக்கிறது<br />
பறவையின் அழைப்பை.</p>
<p>இலையுதிர்காலத்தில் இலைகளையெல்லாம் உதிர்த்துவிட்ட நிலையிலும் அழகான தோற்றம் கொண்டிருக்குமாம் மேப்பில் மரம். இலையுதிர்காலம், கடுங்குளிர் இவற்றைக் கடந்து நம்பிக்கையுடன் மேப்பில் மரத்தில்</p>
<p style="padding-left: 30px;">குஞ்சுப் பறவை<br />
கண்விழித்துக் கூவுகிறது.</p>
<p>என்று நம்பிக்கை ஊட்டுகிறது.</p>
<p>இரா. முருகனின் &#8216;பாங்காக் வீதியில் பொழுது புலர்கிறது&#8217; என்ற கவிதை இத்துறைக்கு ஒரு பங்களிப்பு. &#8216;புவா&#8217; என்ற கவிதையையும் இங்குக் குறிப்பிட வேண்டும். பெண்ணியச் சிந்தனையாளர் சிமோன் த புவார் அவர்களைக் குறிப்பிட்டு விளையாட்டாக அமைந்துள்ளது இந்தக் கவிதை. இக்கவிதையில் இன்னொரு சிறப்பு மற்ற மாநிலங்களைப் பற்றியு,ம் அது பேசுவதுதான்.</p>
<p style="padding-left: 30px;">டிபன்சு காலனி மேஜர் குப்தாவின்<br />
ஒற்றைப் பெண் ரஞ்சனா குப்தா.<br />
ஜீன்ஸும், டீசர்ட்டும், குட்டை முடியுமாகப்<br />
பொழுது போக ஆபீசு வருகிறாள்</p>
<p>என்று ரஞ்சனா குப்தா என்ற வடநாட்டுப் பெண்ணை அறிமுகப்படுத்துகிறது கவிதை. சிவகங்கை, தில்லி, தெராதூன் என்ற பல ஊர்களில் சுற்றுகிறது கவிதை. சிமோன் த புவார் எழுதிய இரண்டாம் செக்ஸ் என்ற புத்தகத்தின் பெயருக் கவிதையில் அடிபடுகிறது. கொச்சைத் தமிழில் &#8216;புவா&#8217;, இந்தக் கவிதையில் உள்நாடு, அயல்நாடு, பெண்ணிய இயக்கம், மார்க்சிய இயக்கம், எருமைப் பண்ணை முதலியவை பேசப்படுவது இவற்றைப் பற்றிய அக்கறையில்லாதவனுடன் தொடர்பு கொள்வதால் கவிதை ஒரு வினோத நிலைமையில் அடைபடுகிறது.</p>
<p>வெளிநாட்டுக்குப் போய்விட்டுத் திரும்பியவர்கள் தாங்கள் சென்று வந்த நாட்டைப் பற்றித் தங்கள் ஆயுள் முழுவதும் பேசக் கடமைப்பட்டது போல ஆகிவிடுகிறார்கள். இரா. முருகனின் &#8216;பென்சில்வேனியா&#8217; என்ற கவிதை அந்த நிலைமையை நினைவுபடுத்துகிறது.</p>
<p style="padding-left: 30px;">ஸ்டியரிங் ஒடித்துத் தெரு திரும்பும்போது<br />
பின்னாலிருந்துதான் தினமும் அவர்களைப் பார்க்கிறேன்<br />
காலை வெயிலுக்கு முதுகு காட்டிக்<br />
கைத்தடி ஊன்றிப் போகும் தம்பதி<br />
பக்கத்தில் கடக்கும் போதெல்லாம்<br />
இருமலோடு காதில் விழுவது பென்சின்வேனியா.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be10/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கனவு பல காட்டல் 9</title>
		<link>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be9/</link>
		<comments>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be9/#comments</comments>
		<pubDate>Mon, 04 Jul 2011 17:30:14 +0000</pubDate>
		<dc:creator>ஞானக்கூத்தன் படைப்புகள்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.gnanakoothan.com/?p=329</guid>
		<description><![CDATA[அயல்நாட்டைத் தங்கள் கவிதைகளில் வருணிக்கத் தொடங்கியதும், தமிழ்க் கவிதைக்குள் புதிய பரிமாணத்தைக் கொண்டுவந்துள்ளனர் தமிழ்க் கவிஞர்கள். ராதாகிருஷ்ணன் கவிதையில் ஓர் அமெரிக்கத் தொழிலாளி சித்திரமானது போல கோகுலகண்ணன் கவிதைகளிலும் மனிதர்கள், பருவங்கள் சித்தரிக்கப்படுகின்றன. ஒரு நாடு மக்களால், மொழியால், பண்பாட்டால் வேறுபடுவது போல அந்த நாட்டின் தட்பவெப்பத்தால் வேறுபடுவது தெரிகிறது. வெளிநாடு என்பது இப்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைத்தான் குறிக்கிறது. அந்த நாடுகள் குளிர் நாடுகள். பனிப் புயல், பனிப் பொழிவுகள், அந்த நாட்டுக்கே உரிய சில [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அயல்நாட்டைத் தங்கள் கவிதைகளில் வருணிக்கத் தொடங்கியதும், தமிழ்க் கவிதைக்குள் புதிய பரிமாணத்தைக் கொண்டுவந்துள்ளனர் தமிழ்க் கவிஞர்கள். ராதாகிருஷ்ணன் கவிதையில் ஓர் அமெரிக்கத் தொழிலாளி சித்திரமானது போல கோகுலகண்ணன் கவிதைகளிலும் மனிதர்கள், பருவங்கள் சித்தரிக்கப்படுகின்றன. ஒரு நாடு மக்களால், மொழியால், பண்பாட்டால் வேறுபடுவது போல அந்த நாட்டின் தட்பவெப்பத்தால் வேறுபடுவது தெரிகிறது. வெளிநாடு என்பது இப்போது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைத்தான் குறிக்கிறது. அந்த நாடுகள் குளிர் நாடுகள். பனிப் புயல், பனிப் பொழிவுகள், அந்த நாட்டுக்கே உரிய சில காட்சிகள் எல்லாம் இணைந்து கவிதையில் அந்த நாட்டைப் பற்றியதொரு உணர்ச்சியை உருவாக்குகின்றன. கோகுலக்கண்னன் கவிதையில் இந்த விவரங்கள் இடம்பெற்று திணை மாற்றத்தைத் தெளிவாக்குகின்றன. கவிதையில் குளிர்ச்சி ஒரு முக்கியப் பொருளாக நிறைகிறது.</p>
<p>ஒரு கவிதை &#8216;குளிர்காலத்தை அறிவிப்பவன்&#8217; என்றே பெயர் பெற்றுள்ளது.</p>
<p style="padding-left: 30px;">இரவில்<br />
போக்குவரத்துப் பாலத்தடியில்<br />
படுத்தபோது<br />
குளிரில் விரல்கள்<br />
அவனை அணைத்திருந்தன.</p>
<p>இந்த மனிதன் படுத்திருக்கும் இடத்தைப் பார்க்கையில் அந்த இடம் அயல்நாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று தோன்றக்கூடும். ஆனால்</p>
<p style="padding-left: 30px;">கைவிரல் நகங்களிலும்<br />
கால்விரல் இடுக்குகளிலும்<br />
தேங்கியிருந்தது பனி</p>
<p>என்ற வர்ணிப்பு தமிழகப் பனிக்குப் பொருந்துவதில்லை. மேலும் &#8216;பனிப்பொழிவு&#8217; என்பதும் பொருந்துகிற ஒன்றல்ல. &#8216;போக்குவரத்துப் பாலத்தடி&#8217; என்ற இடம் சர்வதேசத் தன்மை உடையது. சர்வதேசத் தன்மையில் உள்நாடும் வெளிநாடும் உறவாடுகின்றன. &#8216;இப்படியும் ஒரு முடிவு&#8217; என்கிற கவிதையும் பனி பற்றி நிறையப் பேசுகிறது. பனித் துளி, பனி மழை, பனிக் கட்டி என்பவை திணையின் புதுமையை உணர்த்துகின்றன. அதே போல் &#8216;ஆசீர்வதிக்கப்பட்ட மண்&#8217; என்ற கவிதையில் சொல்லப்படும் காட்சி:</p>
<p style="padding-left: 30px;">இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மண்ணில்<br />
பூங்காக்களில் நாய்கள் பந்துகளைத் துரத்துகின்றன<br />
பச்சை இலைகளுக்கிடையே<br />
ஆரஞ்சுப் பழங்கள் குளிர்ந்த சுமையுடன் தொங்குகின்றன</p>
<p>நாய்கள் பந்துகளைத் துரத்தும் காட்சி, தொங்கும் ஆரஞ்சுப் பழங்கள் அயல்நாட்டுக்குத்தான் முதன்மையாக உரிமையுள்ளவை. &#8216;பகலொளியின் ஒலி&#8217; என்ற கவிதையில்</p>
<p style="padding-left: 30px;">தொப்பியை முகத்தின் மேல் கவிழ்த்து மூடி<br />
புல்வெளியில் படுத்திருப்பவன்</p>
<p>உள்நாட்டுக்காரன் இல்லை. ஆனால் இந்தச் சித்திரத்தில் நமக்குள்ள பரிச்சயம் நம் நாட்டுக்குரியது போல் பிரமையைத் தருகிறது. காரணம் கட்டிடக் கலையும் சர்வதேசியத் தன்மை பெற்றுள்ளதுதான். பாலத்துக்கடியில் மனிதன் படுத்திருப்பதும் அப்படித்தான். அதைப் போலவே புல்வெளியில் படுத்திருப்பவன் தோற்றமும். சில காட்சிகள் சர்வதேசத் தன்மைகளைப் பெற்றுவிட்டன &#8211; சிறிதளவு அதன் தொடக்கநிலம் மறைக்கப்படாமல் விடப்பட்டாலும்.</p>
<p>&#8216;நிற்கும் ரயிலில் ஏறும் கிழவி&#8217; என்ற தலைப்பில் இரண்டு கவிதைகளை அல்லது ஒன்றின் இரண்டு நிலைகளை எழுதியிருக்கிறார் கோகுலகண்ணன். இரண்டு கவிதைகளில் இரண்டாவது கவிதை சிறப்பான கவனத்தைப் பெறுகிறது. நவீன கவிதையில் பல கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் ஓர் அன்னியத் தன்மையை அறிமுகப்படுத்துகின்றனர். இத்தன்மை பத்திரிகைக் கவிதைகளிலிருந்து இலக்கியக் கவிதையை வேறுபடுத்திக் காட்டுகிறது.</p>
<p style="padding-left: 30px;">ரயில் பெட்டிக்குள் அலைகிறது காற்று</p>
<p>என்ற வரியைக் கவனியுங்கள். &#8216;அலைகிறது&#8217; என்ற சொல்லாட்சி நவீன இலக்கியத்தில் வக்ரோக்தி. மற்றொரு வரி:</p>
<p style="padding-left: 30px;">இரவுக்குள் போக வேண்டிய தூரம் &#8230;</p>
<p>&#8216;இரவுக்குள்&#8217; என்ற நவிற்சி சந்தேக அலங்காரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது. இனி அடுத்த கவிதை:</p>
<p style="padding-left: 30px;"><strong>நிற்கும் ரயிலில் ஏறிய கிழவி &#8211; 2</strong></p>
<p>இரவில் காலியான ரயில் இனி நகரப் போவதில்லை<br />
எனும் உத்திரவாதத்தை அவருக்கு அளிக்கவில்லை<br />
ரயிலின் கடைசி மூச்சை உணர்ந்தவன் போல்<br />
நிற்கும் பெட்டிக்குள் கால் வைக்கிறாள் கிழவி<br />
நகர்கிறது ரயில் ஓசையற்று<br />
நகர்வது ஒரு கால் வைத்த ரயிலா<br />
மறுகால் தொடும் தரையா<br />
பதற்றத்தில் பிளாட்பாரத்தில் விழுந்தவள்<br />
அப்படியே கிடக்கிறாள்<br />
யாருமில்லாத ரயில் எங்கே போகக் கூடும்<br />
யாருமில்லாத ரயில் எப்படி நகரக் கூடும்<br />
என்று அவளுக்குப் புரியவில்லை<br />
கன்னத்தால் அழுத்தி நிறுத்துகிறாள்<br />
நகரும் பிளாட்பாரத்தை.</p>
<p>துல்லியமான கூறுதல் முறை கவிதையில் அமானுஷ்யத் தன்மையைப் பரிமளிக்கச் செய்கிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be9/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கனவு பல காட்டல் 8</title>
		<link>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be8/</link>
		<comments>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be8/#comments</comments>
		<pubDate>Mon, 04 Jul 2011 17:27:19 +0000</pubDate>
		<dc:creator>ஞானக்கூத்தன் படைப்புகள்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.gnanakoothan.com/?p=327</guid>
		<description><![CDATA[&#8216;பெண்களுடன் கடல் கடந்து பயணம் செய்வது வழக்கம் கிடையாது&#8217; என்று பொருள்படும் ஒரு நூற்பா தொல்காப்பியத்தில் இருக்கிறது. ஆனால் ஆண்கள் பல வெளிநாடுகளுக்குத் தனியாக வர்த்தக சம்பந்தமாகப் போய் வந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. சோழனுடைய கப்பல் அலை மட்டத்துக்கு மேலே இரண்டு ஏணி உயரம் உடையதென்று ஒரு குறிப்பு இருக்கிறது. எனவே நிறைய ஆண்கள் வெளிநாடு போய் வந்தார்கள் என்பது தெளிவு. யவனர்கள் தமிழ்நாட்டில் இருந்தார்கள் என்றும் உறுதியாகத் தெரிகிறது. ஆனால் வெளிநாடு சென்ற தமிழர்கள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>&#8216;பெண்களுடன் கடல் கடந்து பயணம் செய்வது வழக்கம் கிடையாது&#8217; என்று பொருள்படும் ஒரு நூற்பா தொல்காப்பியத்தில் இருக்கிறது. ஆனால் ஆண்கள் பல வெளிநாடுகளுக்குத் தனியாக வர்த்தக சம்பந்தமாகப் போய் வந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. சோழனுடைய கப்பல் அலை மட்டத்துக்கு மேலே இரண்டு ஏணி உயரம் உடையதென்று ஒரு குறிப்பு இருக்கிறது. எனவே நிறைய ஆண்கள் வெளிநாடு போய் வந்தார்கள் என்பது தெளிவு. யவனர்கள் தமிழ்நாட்டில் இருந்தார்கள் என்றும் உறுதியாகத் தெரிகிறது. ஆனால் வெளிநாடு சென்ற தமிழர்கள் தாங்கள் போய்ப் பார்த்த நாடுகள் எப்படி இருந்தன என்று எழுதிவைத்ததாகத் தெரியவில்லை. யவனர்களைப் பற்றிப் பேசுகிற தமிழ் இலக்கியம்கூட யவனர்கள் எப்படிப்பட்ட தோற்றம் உடையவர்களாக இருந்தார்கள், அவர்கள் மொழியை இவர்கள் கற்றுக்கொண்டிருந்தார்களா போன்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை. பாரதியார்கூடத் தன் கவிதையில் அவருடைய காலத்தில் வாழ்ந்த ஒரு பிரிட்டிஷ், ஒரு ஃப்ரெஞ்ச் எப்படித் தோற்றம் அளித்தான் என்று குறிப்பிடவில்லை. கவிதை சில சமயங்களிலாவது ஓவியப் பார்வை பெற வேண்டும். இல்லையெனில் உடை பற்றிய விவரம் தெரியாமல் போய்விடும்.</p>
<p>இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லண்டன் சென்ற மகாகனம் வி.எஸ். ஸ்ரீநிவாஸ சாஸ்திரியார்தான் முதல் தடவையாக வெளிநாட்டு நகரம் ஒன்றைப் பற்றிய செய்திகளைக் கூறினார். லண்டன் நகரைப் பற்றிய அவரது குறிப்புகள் நமது நாட்டைப் பற்றி ஒப்பிட்டுப் பார்க்க உதவுகின்றன. லண்டன் பற்றிய அவரது சித்தரிப்புக்குப் பிறகு பிரயாண இலக்கியம் உருவானாலும் கவிதையைப் பொறுத்த மட்டில் வெளிநாடு ஒரு சூன்ய ப்ரதேசமாகவே இருந்துவந்திருக்கிறது. பழந்தமிழ் நாட்டில் வெளிநாடு சென்றவர்கள் வணிகர்களாதலால் அவர்களுக்கு எழுதிவைக்கும் ஊக்கம் ஏற்படவில்லை போலும். பின்பு எழுத்தாளர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிட்டவே மற்ற நாடுகளைப் பற்றிய பதிவுகள் நவீன கவிதையில் கிடைக்கத் தொடங்கின. இந்த சந்தர்ப்பத்தில் நகுலனின் சகோதரி திரிசடை என்ற பெயரில் அமெரிக்க அனுபவத்தைப் பற்றி 70களில் எழுதிய கவிதைகள் நினைவுக்கு வருகின்றன. &#8216;திரிசடை&#8217; என்ற அரக்கியின் பெயரை அவர் தன் புனைபெயராகக் கொண்டதைப் பாராட்ட வேண்டும்.</p>
<p>70களுக்குப் பிறகு நல்ல கவிஞர்கள் வெளிநாட்டில் வாழும் வாய்ப்பு தமிழுக்குக் கிடைத்திருக்கிறது. இவர்களில் ஒருவர் ஆர். ராதாகிருஷ்ணன். ராதாகிருஷ்ணனின் &#8216;நெகிழ்ச்சி ஒரு நிகழ்ச்சியல்ல&#8217; என்ற கவிதைத் தொகுப்பில் &#8216;ஒரு சந்திப்பு&#8217; என்ற கவிதை ஓர் அருமையான, அழகிய கவிதை. அதன் சர்வதேசியத் தன்மை வியப்பைத் தருகிறது. குப்பைகளை அகற்றி எடுத்துப் போக வந்த தொழிலாளியுடன், வீட்டுக்காரர் நடத்தும் உரையாடலே கவிதையாக அமைந்திருக்கிறது. இருவருடைய மனநிலையும் தெளிவாகக்ட் காட்டப்படுகிறது. தொழிலாளியின் உலக ஞானம், அரசியல் அறிவு முதலியன தவறாமல் கூறப்படுகின்றன. குப்பை அகற்றும் அமெரிக்கத் தொழிலாளி சராசரிக்கு மேற்பட்ட அறிவாளியாக இருக்கிறான் என்பது கவனத்துக்குரியது.</p>
<p style="padding-left: 30px;">ஏன் சர்க்கார் உள்பட<br />
எல்லோரும் ஏழைகளை,<br />
வேலை இல்லாதவர்களை<br />
கயவர்களாக, குற்றவாளிகளாக<br />
கருதி வெறுக்கிறார்கள்<br />
அவர்களைக் கண்டு அருவருத்து<br />
அஞ்சி விலகுகிறார்கள்</p>
<p>என்று தொழிலாளி கேட்கிறான்.. இந்தப் பகுதி நமது பாராட்டைப் பெறுகிறது. இந்த அவதானிப்பின் சர்வதேசியத் தன்மைக்காக.</p>
<p>தமிழ்க் கவிதை இலக்கியம், இலக்கியம் என்ற அளவில் பிற நாட்டு இலக்கியத்தின் மீது பார்வை செலுத்தியது. நவீன இலக்கியத்தில் மொழிபெயர்ப்புகளும் பிற நாட்டாரின் கலை இலக்கியம் பற்றிய கருத்துகளும் நமது இலக்கியத்தில் உருவான உலகத் தொடர்பை விளக்குகின்றன. ஆனால் பிற நாட்டு ஓவியம், சிற்பம் முதலிய கலைகள் பற்றிய குறிப்புகள் இலக்கியத்தில் காணப்படுவது அரிது. தவறிப்போய் யாராவது ஒருவர் மோனாலிசாவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம். ராதாகிருஷ்ணன் கவிதையில் பிற நாட்டு ஓவியமும் குறிப்பிடப்படுகிறது. அப்படி அமைந்த அற்புதமான கவிதைதான் &#8216;அலறல்&#8217;.</p>
<p style="padding-left: 30px;"><strong>அலறல்</strong></p>
<p>எடுவர்டு முன்ச்சின் மறக்க முடியாத<br />
ஓவியம்: &#8216;அலறல்&#8217; எனப் பெயர்<br />
பெற்றது. அவ்வளவுதான்.<br />
ஒன்றுமே சொல்ல இயலாத<br />
இந்த ஓவியத்தைப் பற்றி பல<br />
புத்தகங்கள், அதற்கும் மேலே<br />
கட்டுரைகள், விவாதங்கள்<br />
ஆத்ம ப்ரகடனவாதம் என்ற கலை சித்தாந்தம்</p>
<p>அன்று பஸ்சில் ஜன்னலோரமாக<br />
அமர்ந்திருந்தவரின் வாய் முற்றிலும்<br />
திறந்த வண்ணமாகவே இருந்தது.<br />
கடைசி ஸ்டாப்பில் இறங்கப் போன நான்<br />
அவரை எழுப்பலாமென்றால்<br />
அவர் உயிர் பிரிந்துவிட்டிருந்தது.</p>
<p>கவிதையைப் பார்க்கப்படுவதும் (த்ருஸ்ய) கேட்கப்படுவதும் (ஸ்ரவ்ய) என இரண்டு வகைகளாக்குகிறது ஸம்ஸ்கிருதம். ராதாகிருஷ்ணனின் &#8216;அலறல்&#8217; இந்தக் கருத்தை நிலைநாட்டுகிறது.</p>
<p>குறிப்பு: முன்ச், காண்டின்ஸ்கி, வான் கோக் ஆகிய மூவரும் ஆத்ம ப்ரகடனவாத ஓவியர்களாகக் குறிப்பிடப்படுகிறார்கள்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be8/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கனவு பல காட்டல் 7</title>
		<link>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be7/</link>
		<comments>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be7/#comments</comments>
		<pubDate>Mon, 04 Jul 2011 17:24:43 +0000</pubDate>
		<dc:creator>ஞானக்கூத்தன் படைப்புகள்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.gnanakoothan.com/?p=325</guid>
		<description><![CDATA[ஒரு இலக்கியக் கூட்டத்தில் இயக்குநர் பாலு மகேந்திரா சொன்னார்: &#8216;ஒரு கிழவி வடை சுட்டுக்கொண்டிருந்தாள் என்று எழுத்தாளர் எழுதிவிடுவார். ஆனால் அந்தச் செய்தியை வைத்துக்கொண்டு திரைப்படம் எடுக்கும் இயக்குநர் பல விஷயங்களைத் தானே உருவாக்கிக்கொள்ள வேண்டும். கிழவி என்றால் எத்தனை வயது உடையவளாக அவளைக் காட்டலாம். எந்த இடத்தில் அவள் தன் தொழிலைச் செய்துகொண்டிருந்தாள். எல்லாவற்றையும்விட அவள் வடை சுட்டுக்கொண்டிருக்குக்ம்போது அது காலையா மாலையா? இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு வந்துதான் அந்த நிகழ்ச்சியைத் திரைப்படமாக்க முடியும். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>ஒரு இலக்கியக் கூட்டத்தில் இயக்குநர் பாலு மகேந்திரா சொன்னார்: &#8216;ஒரு கிழவி வடை சுட்டுக்கொண்டிருந்தாள் என்று எழுத்தாளர் எழுதிவிடுவார். ஆனால் அந்தச் செய்தியை வைத்துக்கொண்டு திரைப்படம் எடுக்கும் இயக்குநர் பல விஷயங்களைத் தானே உருவாக்கிக்கொள்ள வேண்டும். கிழவி என்றால் எத்தனை வயது உடையவளாக அவளைக் காட்டலாம். எந்த இடத்தில் அவள் தன் தொழிலைச் செய்துகொண்டிருந்தாள். எல்லாவற்றையும்விட அவள் வடை சுட்டுக்கொண்டிருக்குக்ம்போது அது காலையா மாலையா? இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு வந்துதான் அந்த நிகழ்ச்சியைத் திரைப்படமாக்க முடியும். இது ஓர் இயக்குநர் வேலையாகிறது.&#8217; இயக்குநர் பாலு மகேந்திரா சொன்னது உண்மைதான். ஆனால் எழுத்தாளர்கள் பொதுவாகக் காலம், இடம் மற்றும் நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்கள் போன்ற செய்திகளைக் குறிப்பிட்டுத்தான் தங்கள் கதைகளை அமைக்கிறார்கள். கவிதையைப் பற்றி அப்படிக் கூற முடியாது. அது பெரும்பாலும் கூற்றுகளால் அமைவதால் நேரடியாகச் சில செய்திகளைத் தருவதில்லை. இருந்தாலும் இவை உப லட்சணமாகக் கூறப்பட்டவற்றுள் அடங்கியதாகக் கொள்வதே பொருள் கொள்ளும் மரபாகும். உதாரணமாக, ஒருவன் சாப்பிட்டான் என்றால் என்னென்ன சாப்பிட்டான் என்று பட்டியல் இட வேண்டியதில்லை. கவிஞர் சொல்ல வேண்டும் என்று கருதினால் ஒழிய குறிப்பிட்ட பொருள் கூறப்படுவதில்லை.</p>
<p>சத்திமுற்றப் புலவரின் புகழ்வாய்ந்த &#8216;நாராய் நாராய்&#8217; என்ற பாடலில்</p>
<p style="padding-left: 30px;">கையது கொண்டு மெய்யது பொத்திக்<br />
காலது கொண்டு மேலது தழீஇப்<br />
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்<br />
ஏழையாளனாக</p>
<p>இருந்தது &#8216;வாடையில்&#8217; என்பது குறிப்பிடப்படுகிறது. அதாவது குளிர் காற்றில். புலவர் அப்படி வருந்தியதாகக் கூறுகிறார். ஒரு காலத்தைக் குறிப்பிட்டுக் கூறாவிட்டாலும் அது இன்ன காலத்தில் என்று கவிதையை வரையறுத்துக்கொள்ளலாம்.</p>
<p>தொல்காப்பியம் அகத்திணை இயலில் பெரும் பொழுது, சிறு பொழுது, பருவம் பற்றிப் பேசுகிறது. ருது தவிர திணைக்கும் இன்னின்ன காலம் சிறப்புடையது என்கிறது தொல்காப்பியம். கார்காலம், கூதிர் காலம், பனி எதிர் பருவம், வைகறை, விடியல், நண்பகல், வேனில், பின்பனி முதலியவற்றைத் தொல்காப்பியம் சொல்கிறது. எனவே ஒரு திணையைப் பற்றிப் பேசும் செய்யுள் தன்னுடைய பொழுதை வெளிப்படையாகக் குறிப்பிடாவிட்டாலும் அதற்குரிய காலத்தில் பெரும் பொழுது, சிறு பொழுதில் நடக்கிறதென்று கொள்ள வேண்டும்.</p>
<p>நவீன கவிதை காலம் பற்றிய உணர்வைப் பெரிதும் போற்றிக்கொள்கிறது என்பது உண்மை. காலங்களில் கோடை, பனிக் காலம், மழைக் காலம், முதலியவை கவனத்தைப் பெறுகின்றன. மழைக் காலம் அதிகக் கவனத்தை ஈர்ப்பதாகக்கூடக் கூறலாம். கோடையைக் க.நா.சு. மனப் புழுக்கத்தைத் தெரிவிக்கும் புறவயப் பொருளாகக் கையாண்டிருக்கிறார். சுகுமாரனின் கவிதைத் தொகுப்பு &#8216;கோடை காலக் குறிப்புகள்&#8217; என்று பெயர் பெற்றுள்ளது.</p>
<p>யவனிகா ஸ்ரீராம் கவிதை &#8216;வெப்ப கால உறக்கம்&#8217;, வேனிற்கால மழைத் தூறல்கள், மழைக் காலம், குளிர் காலம், கூதிர் காலம் என்று பருவ காலங்களைக் குறிப்பிடுகிறது.</p>
<p style="padding-left: 30px;">நிஜமேதான் ஒரு சமயம்<br />
இரகசியமாய் இருந்தது<br />
வேனிற் காலங்களில்<br />
மழை தூறுவது போல</p>
<p>என்றும்</p>
<p style="padding-left: 30px;">மழைக் காலத்தில்<br />
சிறு மீன்கள் அசையும் பளிங்கு நீரில்</p>
<p>என்றும்</p>
<p style="padding-left: 30px;">காட்டு மொச்சைகள்<br />
குதிரும் பருவத்தில்</p>
<p>என்றும் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் அழகாகப் பேசுகின்றன. ஸ்ரீராம் &#8216;பருவம் தவறுவது&#8217; என்று ஒரு அற்புதமான கவிதை எழுதியிருக்கிறார். கவிதையின் நடுவில்</p>
<p style="padding-left: 30px;">இல்லையெனில், மழைக் காலத்தில்<br />
தானியங்களின் விலை ஏன் கூடுகிறது?<br />
நம்மில் பலர் இறந்து போனவர்கள் போல<br />
ஏன் காணாமல் போய்விடுகிறார்கள்?</p>
<p>என்று கேட்டு</p>
<p style="padding-left: 30px;">தயவுசெய்து<br />
பக்கவாட்டில் இருந்து எப்போதும் அழைக்காதே<br />
அது மரணத்தை ஞாபகப்படுத்துகிறது<br />
அம்புக் குறி போல் முன்னோக்கிச் சென்றுகொண்டிருந்த<br />
பறவைக் கூட்டத்தை ஏதோ ஒன்று<br />
சரேலென இழுத்து மறைந்ததை<br />
இன்று நான் வானத்தில் பார்த்தேன்</p>
<p>என்று முடிகிறது கவிதை. சாதுரியமாக அமைக்கப்பட்ட இக்கவிதையில் ஒரு நொடிப் பொழுதில் பயத்தில் மனிதன் தன் பிறப்பையே மறந்து ஆபத்துக்குள்ளாகிப் பறக்கும் ஒரு பறவைக்கு நிகராகிறான். பருவம் தவறியது&#8230; உயிரும் தவறுகிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be7/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கனவு பல காட்டல் 6</title>
		<link>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be6/</link>
		<comments>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be6/#comments</comments>
		<pubDate>Mon, 04 Jul 2011 17:21:56 +0000</pubDate>
		<dc:creator>ஞானக்கூத்தன் படைப்புகள்</dc:creator>
				<category><![CDATA[கட்டுரை]]></category>

		<guid isPermaLink="false">http://www.gnanakoothan.com/?p=323</guid>
		<description><![CDATA[அகம், புறம் என்பதில் அகம் என்பது வீடு. புறம் என்பது வெளி. &#8216;அவர் இருக்கிறாரா?&#8217; என்று கேட்டால் &#8216;ஆம். அவர் உள்ளே இருக்கிறார்&#8217; எனவும் &#8216;இல்லை. அவர் வெளியே போயிருக்கிறார்&#8217; எனவும் பதில் கிடைக்கும். வெளி என்பது குறிப்பிடப்படாத இடம். ஆனால் ஒரு நிகழ்ச்சி என்பது அகம், புறம் இரண்டிலும் நடக்கும். எனவே மனிதன் எப்போதும் ஒரு நிகழ்வில் பங்கு கொண்டவனாகவே இருக்கிறான். &#8216;மனிதன் ஒரு சந்தர்ப்பத்தில்தான் எப்போதும் இருக்கிறான்&#8217; என்றார் ஒரு வெளிநாட்டுச் சிந்தனையாளர். சந்தர்ப்பம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>அகம், புறம் என்பதில் அகம் என்பது வீடு. புறம் என்பது வெளி. &#8216;அவர் இருக்கிறாரா?&#8217; என்று கேட்டால் &#8216;ஆம். அவர் உள்ளே இருக்கிறார்&#8217; எனவும் &#8216;இல்லை. அவர் வெளியே போயிருக்கிறார்&#8217; எனவும் பதில் கிடைக்கும். வெளி என்பது குறிப்பிடப்படாத இடம். ஆனால் ஒரு நிகழ்ச்சி என்பது அகம், புறம் இரண்டிலும் நடக்கும். எனவே மனிதன் எப்போதும் ஒரு நிகழ்வில் பங்கு கொண்டவனாகவே இருக்கிறான். &#8216;மனிதன் ஒரு சந்தர்ப்பத்தில்தான் எப்போதும் இருக்கிறான்&#8217; என்றார் ஒரு வெளிநாட்டுச் சிந்தனையாளர். சந்தர்ப்பம் என்பது இடமும் காலமும் சார்ந்ததுதான். தொல்காப்பியர்</p>
<p style="padding-left: 30px;">ஒருநெறிப் பட்டாங்கு ஓரியல் முடியும்<br />
கரும நிகழ்ச்சி இடமென மொழிப</p>
<p>என்று இடம் அல்லது களம் என்பதற்கு விளக்கம் தருகிறார். உரையாசிரியர்கள் வினைசெய் இடம் என்றும் சொல்கிறார்கள். நாடகம், சங்கீதம், விளையாட்டு முதலியன நிகழும் இடம் அரங்கம் என்கிற களமாகும். வேடிக்கை பார்ப்பதும் ஒரு கரும நிகழ்ச்சிதான். வேடிக்கை காட்டுவதும் ஒரு கரும நிகழ்ச்சி என்பது போல.</p>
<p>கே.எஸ். வேங்கட ரமணியின் &#8216;தொப்பி அணிந்த பிச்சைக்காரன்&#8217; கவிஞரால் பார்க்கப்படுகிறான். அவன் உருவம், அவனது குரல், அவனது திறமை, அவனது வரலாறு முதலியன கவிஞரால் பார்க்கப்படுகின்றன. இந்தப் பார்த்தல் &#8211; அவதானித்தல் &#8211; என்ற காரியமே ஒரு நிகழ்ச்சியாகிறது. யுவன் சந்திரசேகரின் &#8216;ஒட்டகம்&#8217;, தேவேந்திர பூபதியின் &#8216;நேஷனல் சர்க்கஸ்&#8217; ஆகிய இரண்டு கவிதைகளிலும் தொல்காப்பியர் சொல்லும் ஒரு கரும நிகழ்ச்சி இயங்குவதைப் பார்க்கலாம். அரங்குகள், கோயில்கள் போன்றவற்றில் என்ன நிகழும் என்பது முன்னமேயே தெரிந்திருக்கக்கூடிய ஒன்றுதான். அப்படி திட்டவட்டம் இல்லாத இடமும் உண்டு. இரண்டு இடத்திலும் ஒரு சந்தர்ப்பம் அமைகிறது. இப்படி அமைகிற சந்தர்ப்பம் காரணமாகத்தான் &#8216;ரஸா&#8217; (ரஸம்) உருவாகிறது என்கிறார் நாட்டிய சாஸ்திர ஆசிரியரான பரத முனிவர்.</p>
<p style="padding-left: 30px;">விபாவ அநுபாவ வியபிசாரி ஸம்யோகாத்<br />
ரஸ நிஷ்பத்தி&#8230;</p>
<p>என்கிற நாட்டிய சூத்திரம் மிகவும் விவாதிக்கப்படுகிற ஒன்று. இதில் &#8216;விபாவ&#8217; என்ற சொல் பொருத்தமான சூழ்நிலை என்று பொருள் படுகிறது. &#8216;விபாவ&#8217; என்பதில் உள்ள &#8216;பாவ&#8217; என்ற சொல் &#8216;உளவாக்குதல்&#8217; என்று பொருள் உள்ள வேர்ச் சொல்லிலிருந்து தருவிக்கப்பட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கரும நிகழ்ச்சிக்கு ஏற்ற சூழ்நிலைமை இருக்க வேண்டும் என்பதில் தொல்காப்பியமும் நாட்டிய சாஸ்திரமும் ஒன்றுபடுகின்றன.</p>
<p>&#8216;கரும நிகழ்ச்சி&#8217; என்றால் ஏதோ விபரீதமான விஷயம் என்று நினைத்துவிடக் கூடாது. எல்லா விதமான செயல்களும் கருமம் என்பதில் அடங்கும். கவிதை என்பதற்குக் &#8216;கவியின் கருமம்&#8217; என்று விளக்கம் தந்திருக்கிறார் ஸம்ஸ்கிருத வழியில் பரிமேலழகர். இந்த நிகழ்ச்சிதான் எத்தனை எத்தனையாக விரிந்திருக்கிறது.</p>
<p>தேவதச்சன் &#8216;என் எறும்பு&#8217; என ஒரு கவிதை எழுதியிருக்கிறார். கவிதையின் நாயகனுடன், அதுவும் ரயிலில், பயணம் செய்கிறது. அப்போது</p>
<p style="padding-left: 30px;">அருகில் இருந்த வயதான மனிதன்<br />
அதை<br />
நசுக்கிக் கொல்ல முயன்றான்<br />
கொன்றுவிட்டான்.<br />
இறந்து கிடக்கும் என் எறும்பைத் தூக்கிச்<br />
செல்ல யார் வருவார்கள்<br />
இன்னும் சில எறும்புகள் இன்னும் சில<br />
எறும்புகள்.</p>
<p>எறும்பை &#8216;என்&#8217; என்று சொந்தம் சொல்வதும் பின்னர் எறும்புக்கு நிகழ்வதைக் கூறுவதிலும் ஒரு &#8216;சூழ்ச்சி&#8217; தெரிகிறது.</p>
<p>ஆனால் தாரா கணேசனின் ஒரு கவிதையில் வரும் நாயகன் வேறு விதமானவன். அவனது வினைசெய் இடமும் வினோதமானது. இடம் &#8216;செத்த காலேஜ்&#8217; என்று மக்களால் அழைக்கப்பட்டுவந்த அருங்காட்சி அகம். நாயகனை இப்படி அறிமுகப்படுத்துகிறார் கவிஞர்.</p>
<p style="padding-left: 30px;">வியர்வை புழுங்கிய கோடை மதியத்தில்<br />
என்ன செய்வதென யோசிக்க<br />
முதலில் போகத் தோன்றிய இடம் அருங்காட்சியகம்</p>
<p style="padding-left: 30px;">உள்ளே போக வேண்டுமென்று கூட அவசியமில்லை<br />
வேர்க்கடலை கொறித்துக்கொண்டே வேடிக்கை பார்க்கலாம் சற்று</p>
<p>கோடை மதியத்தில் பொழுது போக்க முடியாத ஒருவனின் மனநிலையைக் கவிதை வெளிப்படுத்துகிறது. முப்பது வரிகளுக்கு மேல் நடக்கும் இக்கவிதையைத் தாரா கணேசன் இப்படி முடிக்கிறார்.</p>
<p style="padding-left: 30px;">நடக்கவோ மூழ்கவோ<br />
புதையவோ இருக்கவோ இறக்கவோ<br />
எல்லாம் சம்மதம் என்றே தோன்றுகிறது</p>
<p>கவிதையின் கடைசி வரிகள் வெளிப்படுத்தும் மனநிலைக்குப் பொருத்தமான இடமாக அருங்காட்சியகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறதோ? உள்ளே போக வேண்டிய அவசியம் கூட இல்லை என்று சொல்லப்பட்டிருப்பது கவிதை நாயகனின் அநுபவம் காரணமோ? உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரிந்துவிட்டதால் உள்ளே போக அவசியமில்லாமல் போய்விடுமா? அருங்காட்சியகத்துப் பொருள்களின் &#8216;இருத்தல் வகைமை&#8217;யால் ஈர்க்கப்பட்டவர் ஏன் வெளியே நின்று வேடிக்கை பார்க்க விரும்புகிறார்? ஒரு விஷயம் கவனித்தீர்களா? வேடிக்கை பார்க்கப்பட்டவர்களுக்கு அசைவு இருக்கிறது. ஆனால் வேடிக்கை பார்ப்பவரிடம் இல்லை. பார்க்கப் போனால் இவரும் ஒரு சிலைதான்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.gnanakoothan.com/2011/07/04/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%95%e0%ae%be6/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>

