ஞானக்கூத்தன் படைப்புகள்

மரபும் மங்கல நாணும்

மரபு எத்தனையோ வகைகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது. முன்னோர்களால் முதலில் நிர்மாணிக்கப்பட்டது. காலம் காலமாகத் தொடர்ந்து வர மரபு அதைப் பின்பற்றுபவர்களால் போற்றப்பட்டுவருகிறது. சில மரபுகள் மீறப்பட்டால் தண்டனையும் பரிகாரமும் உண்டு. அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளே மரபினால் நிர்ணயிக்கப்படுவதால் மனித மனத்தின் ஆழத்தில் மரபு பதிவு கொள்கிறது. மரபைப் பின்பற்றும்போது மன நிறைவும் மீறும்போது, பின்பற்றாதபோது பயமும் மன உறுத்தலும் ஏற்படுகிறது. இதனால் மரபை மாற்றுகிறவர்கள், மீறுபவர்கள் ஆகிய இருவரிடத்திலேயும் எதிர்ப்பும் கோபமும் உண்டாகிறது. இந்தக் கோபம் கவிதையில் வெளிப்படத்தான் செய்கிறது. ஒன்று கருத்தாகவோ அல்லது கவிதாபாத்திரத்தின் செயலாகவோ இது வெளியாகிறது. பெண் கவிஞர்களில் வத்ஸலாவின் கவிதைகளில் இப்படிப்பட்ட உணர்வைப் பார்க்கலாம். ‘எறும்பூர’ என்ற கவிதையில் வத்ஸலா

பூ, மஞ்சள், தாலி, குங்குமம் ஆகிய
பெண்மையின் யூனிஃபார்மணிந்து
ஏறுகிறேன் ரயிலில்

என்று எழுதுகிறார். இதில் ‘யூனிஃபார்ம்’ என்ற சொல்லாட்சியில் கோபம் கொப்பளிக்கிறது. பூ, மஞ்சள், தாலி, குங்குமம் என்ற நான்கு பொருள்களின் மதிப்பையும் இச்சொல் குறைக்க முயல்கிறது. ‘ஏறுகிறேன் ரயிலில்’ என்ற பயணக் குறிப்பிலும் விரக்தியும் வேதனையும் ஒன்றாகின்றன. இந்தப் பயணம் பெண்களால் மட்டுமே அனுபவிக்கப்படும் ஒரு பயணம். புகுந்த வீட்டுக்குப் போகும் முதல் பயணம். இப்பகுதியில் குறிப்பிடப்பட்ட தாலி மற்றொரு கவிதையில்

அழுக்கு மஞ்சள் கயிறு

என்று வர்ணிக்கப்படுகிறது. தாலி ஒரு கயிறுதான். ஸம்ஸ்கிருதத்தில் இது ‘மங்கல ஸூத்ரம்’ என்று சொல்லப்படுகிறது. ‘ஸூத்ரம்’ என்றால் நூல். ஆனால் இது நிகழ்ச்சியின் சிறப்பால் தாலி என்ற பெயர் பெறுகிறது. நிகழ்ச்சியின் பொருட்டு ஒரு பொருளுக்கு மற்றொரு பெயரிடப்படுவதும் மரபுதான். இந்தப் பெயரைக் குறிப்பிடாமல் வெறுமனே ‘கயிறு’ என்று கவிதாபாத்திரம் குறிப்பிடுவதால் அந்தப் பொருளின் மதிப்பு குறைக்கப்படுகிறது அல்லது இறக்கப்படுகிறது என்பது தெளிவு. இந்த இறக்கத்தை ‘இழப்புகள்’ என்ற கவிதையில் வத்ஸலா அதிர்ச்சி தருகிற முறையில் காட்டுகிறார். அதிர்ச்சிக்குக் காரணம் இக்கவிதைப் பகுதியில் ஆளப்படும் ‘குற்ற உணர்வின்றி’ என்ற தொடர்தான்.

எனக்குள் இருந்த என்னையோ
காணவே காணோம்
எஞ்சியிருப்பது
அடி மனதில் கனன்றெரியும் தழலும்
நீ இல்லாத சமயங்களில்
குற்ற உணர்வின்றி
கட்டிலின் மேல் நான் கழற்றி வைக்கும்
நீ கட்டிய தாலியும்தான்.

தாலியை ‘நீ கட்டிய தாலி’ என்று குறிப்பிடுவது இயல்பாகக் கூறியே கோபத்தைக் காட்டும் யுக்தியாகப் படுகிறது. வத்ஸலா காட்டும் பெண் வஞ்சிக்கப்பட்டவளாகத் தெரிகிறாள். ஆனால் தாலியை இரவில் தூங்கப் போகுமுன் கழற்றி வைத்துவிடுவது தற்போது பரவலான பழக்கம்தான் என்று நம்பப்படுகிறது.

ஆனால் ரா. ஸ்ரீநிவாசனின் ‘பொட்டு’ என்ற கவிதையில் காட்டப்படும் பெண் வித்யாசமானவள். அவள் அபலை – பலமற்றவள். அவளுக்கு இருந்துவரும் ஒரு பலம் எப்போது போகுமோ என்ன ஆகுமோ என்ற நிலையில் உள்ளது. ஆனால் அவளிடம் ஒரு பண்பாட்டு உணர்வு அவளை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருக்கிறது. ஒரு வினோதமான முறையில். அந்தப் பெண்ணைக் கவிஞர் வருணிக்கிறார்.

(…)
கழுத்தில் முத்துக் கோர்த்த
கருமணி மாலையோடு
சாளரம் வைத்த ரவிக்கையும்
வாவென்று அழைக்கும்.

எதற்கு அழைக்கிறாள்?

நெற்றியில் எழுதி ஒட்டப்படவில்லை
என்றாலும் அவளைக் கண்டால்
ஐயமறத் தெரியவரும்

என்ன தெரியவருகிறது?

பாய்ந்து ஒளிவாள்
போலீஸ்காரரைக் கண்டால் மட்டும்
குற்ற மன்றங்களில்
கட்டிய அபராதத்திற்குக்
கணக்கில்லை அவள் வசம்…

அவளைப் பற்றிய ஒரு சோகமான செய்தியைக் கவிஞர் தருகிறார். கவிதை முடிவை நோக்கிப் போகும்போது வருகிறது அந்தச் செய்தி.

இரவில் இருப்பிடம்
திரும்பும் போது
பரிசுச் சீட்டுகள்
அலுக்காமல் பெறுகிறாள்.

வாழ்க்கை திடீரென ஒரு விடிவுக்காலத்தைக் காட்டாதா என்ற ஏக்கம் அவளுக்கு. ‘அலுக்காமல்’ என்ற சொல் சீட்டு விற்பவனுக்கு அவளிடம் உரையாடும் அளவுக்குப் பரிச்சயம் இருப்பதை நியாயப்படுத்துகிறது.

ஏதோவொன்று அவளிடம்
குறைந்திருக்கக் கண்டு
சீட்டு விற்பவன்
வியப்புடன் கேட்டான்
நெற்றிக்குப் பொட்டு
இட்டுக் கொள்வதில்லையா?

அவள் தனது வெறும் நெற்றியைத் தொட்டபடி சொல்கிறாள்

அவள் சொன்னாள் பெருமிதம் பொங்க
மரித்துவிட்ட கணவன் நினைவாய்ப்
பொட்டு மட்டும் இட்டுக் கொள்வதில்லை.

இந்தப் பெண்ணின் இழப்பு எப்படி எதிர்கொள்ளப்படுகிறது. எவ்வளவு சிக்கல். ரா. ஸ்ரீநிவாஸன் இக்கவிதையைத் திறம்பட எழுதியிருக்கிறார்.

Posted in கட்டுரை | Comments Off

உடுத்துக் களைந்த பீதக ஆடை உடுத்தி…

காளிதாஸ் கவிதைகளில் மறைவு பற்றிய உரையாடல் தெளிவாகக் கேட்கக்கூடிய ஒன்று. தமிழிலக்கிய வரலாற்றிலேயே மரணம் பற்றி அதிகமாக சிந்தித்தது எழுதியது புதுக்கவிதைதான். சற்று கூர்ந்து பார்த்தால் புதுக்கவிதை சார்பாக மரபுக் கவிதை குறித்து சிலர் வைத்த விமரிசனமே மரபுக் கவிதை துதிப் பாடல்களாக, விழாப் பாடல்களாக மாறிவிட்டன என்பதுதான். இப்படிப்பட்ட பாடல்களை எழுதுகிறவர்கள் அவர்கள் புதுக்கவிதையின் பக்கமாகப் பொதுவாக அறியப்பட்டாலும் புதுக்கவிஞர்களால் மதிக்கப்படுகிறவர்களாக இருப்பதில்லை. இதைப் போலவே புதுக்கவிதைக்கெதிராக மரபுக் கவிதையினர் 1960களில் சொன்ன விமரிசனம்  ‘புதுக்கவிதை சோகத்தைப் போற்றுகிறது, அழுமுகமாக இருக்கிறது’ என்பதுதான். இரண்டு நிலைகளும் உண்மை என்றே சொல்ல வேண்டும். சாவு பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். க.வை. பழனிச்சாமியின் ஒரு தொகுப்பே சாவைப் பற்றிப் பேசியது. காளிதாஸ் கவிதைகள் பல மறைவைப் பற்றிப் பேசியவை. காளிதாஸின் பல கவிதைகளில் ஆடை பற்றிய குறிப்பு கொடுக்கப்படுகிறது. சில சமயங்களில் ஆடை இறப்புத் தொடர்பாக நினைவு கொள்கிறது. வீட்டுக்குள் ஒரு கல்வெட்டு என்ற கவிதையில்

தாத்தாவின் வைப்பாட்டி வீடு
சாயக்காரர் தெருவில்

என்று குறிப்பிடுகிறார். ‘சாயக்காரர் தெரு’ என்பது சேலைகளுக்கு சாயம் ஏற்றுவார் வாழும் தெருவைக் குறிக்கும். அந்தக் காலத்தில் ‘பிள்ளை பிடிப்பு’ என்ற வதந்தி ஊர்மக்களை அச்சுறுத்தும். தாய், குழந்தையைப் பிள்ளை பிடிக்கிறவன் வருகிறான் என்று பயமுறுத்துவாள். இது வதந்தி என்றாலும் பயமாக இருக்கும். இந்த வதந்தி பரவினால்தான் சேலையில் சாயம் பிடிக்கும் என்றும் சொல்வார்கள். இந்த வதந்தி சாயக்காரர் தெருவில் இருந்துதான் எழும்.

வேறு மாதிரியான ‘கடவுள்கள்’ என்ற கவிதையில் பூசாரிகளுக்கு சில வீட்டில் வேட்டிகளை எடுத்துக் கொடுப்பதைக் காளிதாஸ் குறிப்பிடுகிறார். நார்மடிப் புடவைகள் பற்றியும் காளிதாஸ் எழுதியிருக்கிறார்.

நாமரிகிப் பாட்டிக்கு எப்போதும்
மூன்று நார்மடிப் புடவை உபயோகத்தில்

என்று தொடங்குகிறது காளிதாஸின் ‘நார்மடிப் புடவைகள்’ என்ற கவிதை. பிராமண விதவைகளின் உடை பற்றி இக்கவிதை அழகாகக் கூறுகிறது. நார்-மடி என்ற இரண்டு சொற்களாலானது இந்தப் பெயர். பட்டு வஸ்திரத்தைப் போலவே – உண்மையைச் சொன்னால் அதைவிட – தூய்மையானதாக ஆசாரவாதிகளால் கொள்ளப்படுகிறது. நார் – தாவரங்களின் நார். ‘மடி’ என்ற சொல் மிகப் பழமையான தமிழ்-திராவிடச் சொல். ‘மடி’ இன்று பிராமணர்களிடம் அதிகமும் வழங்கப்படுகிறது. பிராமண விதவைகள் யதிகளுக்கு – ஒருவகைத் துறவிகள் – இணையாகக் கருதப்பட்டார்கள். எனவே அவர்கள் ஆண் போல மயிர்நீக்கம் செய்தார்கள். விரதங்கள் மேற்கொண்டார்கள். மதிக்கப்பட்டார்கள். தலைமுடி களைந்து, நார்மடிப் புடவை உடுத்தவர்கள் பெற்ற மதிப்பு மற்ற விதவைகள் பெறவில்லை. ‘மடி’ என்ற சொல் துவைத்து பிறர் சரீரத்தில் படாமல் உலர்த்தி ஒருவர் கட்டிக்கொள்ளும் வேட்டி அல்லது சேலையைக் குறிக்கிறது. புறநானூற்றில் கூட இச்சொல் இடம்பெற்றிருக்கிறது.

‘இறந்தவனின் ஆடை’ என்ற தலைப்பில் மனுஷ்யபுத்திரன் எழுதிய கவிதையும் முக்கியத்துவம் உள்ளது. ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற கவிதையில் தேவதச்சன் ‘வேர்வை ஆடை நேற்றில் விழுகிறது. துவைத்த ஆடைகள் நாளையில் விழுகின்றன’ என்று குறிப்பிடுகிறார். காளிதாஸ் எழுதிய ‘நார்மடிப் புடவைக’ளும் மனுஷ்யபுத்திரனின் ‘இறந்தவனின் ஆடை’ காலம் தாண்டிக் கிடக்கின்றன.

ஆடைகள் காலப் போக்கில் உடம்பை மறைப்பதற்கு என்பதோடு அதன் ஒரு முனை பொருள்களை எடுத்துச் செல்லவும் பயன்படத் தொடங்கிவிட்டன. இடுப்பில் செருகப்படும் ஆடையின் பகுதி வெற்றிலைப் பாக்கு, சிறிய, பெரிய அளவிலான தொகையைப் பத்திரப்படுத்தும் அறையாகவும் மாறிவிட்டது. பணத்தை ‘மடிப்பணம்’ என்று குறிப்பிடுவதுண்டு. ‘மடியில் கனமிருந்தால் வழியில் பயம்’ என்ற பழமொழியில் மடி என்ற சொல் பணத்துக்கு ஆகுபெயராகியிருக்கிறது. முந்தானையும் பெண்களுக்குப் பொருள்களைப் பத்திரப்படுத்தும் அறையாகிவிட்டது. முந்தானையில் முடிந்துகொள்வது என்ற வழக்கும் ஏற்பட்டுள்ளது. முந்தானையை விரிப்பது என்ற தொடர் பெண் தன் விருப்பத்தைக் கூறுவதைக் குறிப்பிடுகிறது. முனியப்பராஜின் கவிதையில் ஒரு கிழவர்

தோள் துண்டில் முடிந்த
மண் ஒட்டிய வேர்க்கடலை

வைத்திருக்கிறார். ‘நிகழ்தகவு’ என்ற கவிதையில் முனியப்பராஜ் ‘கோயிலோர சங்குப் பூ தேடிப் போனாலும் / சாணித் தட்டெடுத்து கம்பங்காடு போனாலும் / அடி முந்தானையிலிருக்கும் கைமுறுக்கு நான்’ என்று வாசகனை அசரவைக்கிறார். ஆனால் எல்லாருடைய கவிதைகளிலும் ஆடை விஷயம் வரும்போது சோகத்தின் மெல்லிய இழை ஜரிகை போல் பார்வையில் படுகிறது. ‘நிற மாலை’ என்ற அழகான கவிதையை இப்படி முடிக்கிறார் முனியப்பராஜ்.

நிறக் குடுவையிலிருந்து
சாயப் பட்டறைக்கும்
நெசவிலிருந்து அக்காவிற்கும்
நெய்தாகிறது புடவை
தட்டித் தட்டி சரியான நேரத்தில்
கூடைக்குள் எறிகையில்
நழுவி விழுகிற பந்தைப் போல்
கனவும் நழுவுகிறது

பல வகைக் கொடைகளில் ‘ஆடைக் கொடை’ தொன்று தொட்டே மக்கள் பண்பாட்டு நிகழ்வுகளில் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. பிறந்த நாளிலிருந்து இறந்த நாள் வரை தொடரும் ஆடை உறவின் அடையாளமாகிவிட்டது. கவிஞர் ஆசு ‘உயிர்க் கசிவு’ என்ற கவிதையில்

அழுக்குத் தாவணியை
அலசிக் கட்டவும்
ஓய்வற்ற
உழைப்புப் பெண் நீ

என்ற உழைப்பாளிப் பெண்ணைப் பற்றி ஒருவன் கூறுகிறான். ‘பிணை’ என்ற கவிதையில் ஆசு கேட்கிறார்.

செத்த பின்னும்
தாய் வீட்டுக் கோடிக்காய்
காத்திருக்கும் சவத்துக்குச்
சுடுகாடு எவ்வுறவில் சேரும்?

Posted in கட்டுரை | Comments Off