ஞானக்கூத்தன் படைப்புகள்

தமிழ்க் கவிதையில் நவீனத்தின் உதயம்

பிரதாப முதலியார் சரித்திரத்தில் மாயூரம் வேதநாயகம் பிள்ளை அனந்தையன் என்ற பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த அனந்தையன், நாவல் வழியாக அறிமுகமாகும் ஆங்கில நூல்கள் படித்த முதல் தமிழன். வேத விரோதமான நூல்களைப் படித்துக் கெட்டுப்போன மனிதநாக வேதநாயகம் பிள்ளை அவனை சித்தரிக்கிறார். அவன் படித்த நூலாசிரியர்களின் பெயரையும் அவர் தந்திருக்கிறார். அனந்தையன் ஆங்கிலம் படித்தவனே தவிர அதில் எழுத முயன்றவன் இல்லை. வேதநாயகம் பிள்ளை ஆங்கிலத்தில் எழுதியவர்களைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. அவருடைய நாவல் வெளியான ஆண்டு 1879 வரை ஆங்கில மொழியில் படைப்பாக்கம் செய்த தமிழர்கள் இல்லை போலும். ஆனால் இந்திய அளவில் பார்க்கப்போனால் மற்ற இந்திய மொழிகளில் பிறந்தவர்கள் ஆங்கிலத்தில், இலக்கியத்தில் படைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். 1829ம் ஆண்டு தொடங்கி 1947 முடிய ஆங்கிலத்தில் எழுதி வெளியிடப்பட்ட கவிதைகளின் தொகுப்பை யூனிஸ் டி சௌஸா வெளியிட்டிருக்கிறார்.

1809ல் பிறந்து 1832ல் மறைந்த ஹென்றி தொராஸியோதான் ஆங்கிலத்தில் உருவாகும் இந்தியக் கவிதை என்ற வினோதத்தைத் தொடஹ்கிவைத்தார் என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் வெளியான இந்த இந்தியக் கவிதைகளைப் படிக்கும்போது இந்திய மொழிகளில் நவீன கவிதை உதயமாவதற்கு இக்கவிதைகளே முன்னோடியாக அமைந்தவை என்று சொன்னால் தவறாகாது. ‘டு இந்தியா – மை நேடிவ் லேண்ட்’, ‘லைன்ஸ் டு அன் இன்ஃபண்ட்’, ‘நைட்’ முதலிய கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வாழ்ந்த காலத்திலேயே கவனிப்புப் பெற்ற கவிஞராக ஹென்றி தெரோஸியோ இருந்திருக்கிறார்.

காசிப்ரஸாத் கோஷ் (1803-1873) என்ற வங்காளக் கவிஞர் ‘ஆங்கிலத்தில் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்ட முதல் ஹிந்து’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் இவர் ஒரு ஹிந்துவைப் போல் அல்லாமல் 14 வயதுக்குத்தான் ஆரம்பக் கல்வி பெறப் போயிருக்கிறார். ‘இளம் விதவைக்கு’ என்ற இவர் கவிதை 1830ல் வெளியாகியிருக்கிறது. ‘பாலைவனத்துப் பூப்போலத் தனிமைப்பட்டவவள் நீ’ என்று தொடங்குகிறது இக்கவிதை. காசிப்ரஸாதின் ‘த ஃபேர்வெல் சாங்’ என்ற கவிதை நெகிழ்வைத் தருகிறது. இந்திய மற்றும் பிரிட்டிஷ் நவிற்சி முறைகளைப் பின்பற்றி அமைந்துள்ளது இக்கவிதை. ஆங்கிலத்தில் பின் எதுகை அமைப்பு பல சமயங்களில் அற்புதமாக இருக்கும். இக்கவிதை அப்படிப்பட்டது.

Where Surya from his throne above
With brightest colours paints the day

என்ற வரிகளில் ‘சூரியன்’ என்ற சொல் இயல்பாக அமைந்து, அடுத்த வரியை கம்பீரமும் அழகும் உடையதாக்குகிறது. ‘செப்டம்பரில் சந்திரன்’ என்ற கவிதையும் ‘இறந்துபோன ஒரு காக்கைக்கு’ என்ற கவிதையும் காசிப்ரஸாதின் பெருமைக்குப் பங்களிப்பவை. இந்தக் கவிதையைப் படித்ததும் என்னுடைய ‘செத்துப் போன பறவை’ கவிதை நினைவுக்கு வந்தது. ‘செப்டம்பரில் சந்திரன்’ கார்காலத்து நிலவைப் பற்றிக் கூறுகிறது. தேவதைகள் அமிழ்தத்தை ஒளித்துவைக்கும் இடமாக உன்னைத்தான் கொண்டார்கள் என்று இந்திய புராண மரபைக் கவிதையில் சேர்த்துக்கொள்கிறார் கவிஞர்.

கோவின் சுந்தர் தத் (1828-1884) ஒரு கவிதையை விசாகப்பட்டினத்தைப் பற்றி எழுத எடுத்துக்கொண்டிருக்கிறார். கிறிஸ்துவராக மாறிய ஒரு ஹிந்து தன் மனைவிக்கு சொல்வதாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். ‘வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்’ என்ற தலைப்பில் ஒரு கவிதையை இவர் எழுதியிருக்கிறார். வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதை முழுத் தொகுப்பு தமிழ்நாட்டிலும் வழங்கியிருக்கிறது. எனக்கு 1954ல் ஒரு தொகுப்பு கிடைத்தது. ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த ஒருவரிடம் வேர்ட்ஸ்வொர்த்தின் பல கவிதைகளைப் படிக்கக் கொடுத்து நான் தாழ்மையுடன் கேட்டிருக்கிறேன். 1960களில் ரா.ஸ்ரீ. தேசிகன் அவர்களிடமும் கேட்டிருக்கிறேன். பாரதியார் ஷெல்லிதாஸன் என்று ஒரு சமயம் புனைபெயர் சூட்டிக்கொண்டார் என்றாலும் ஷெல்லியின் கவிதை குறித்து எதுவும் எழுதவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் வேர்ட்ஸ்வொர்த், ஷெல்லி, கீட்ஸ் என்ற மூன்று கவிஞர்களும் தமிழ்க் கவிதை உலகில் 1950 வரை மூன்று வகைக் கவிதைகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்தார்கள் என்று சொல்லலாம். இவர்களில் கீட்ஸின் கவிதைகளை விரும்பியவர்கள் அதிகம் என்று சொல்லலாம். அந்நிய மொழிக் கவிஞர்களில் க.நா.சு.வைக் கவர்ந்தவர் எட்கர் ஆலன் போ. க.நா.சு. ஆலன் போ பற்றி ஒரு கவிதையும் எழுதியிருக்கிறார். சுந்தர் தத் ‘கங்கை மீது இரவு’ என்ற கவிதையில் ‘சூரிய ஒளி சுட்டிக் காட்டிய குறைகளிலிருந்து பொருள்களை விடுவித்த’தாக நிலவைக் குறிப்பிடுகிறார்.

கிரீஸ் சுந்தர் தத் (1833-1892) கவிதைகளில் வேப்பமரம், குருவி முதலிய நமது ஆர்வத்தைத் தணிக்கின்றன. ராமசர்மா (1837-1918)வின் கவிதைகளில் ‘த ஜாலி பெக்கர்ஸ் (பிச்சைக்காரர்கள்)’ என்ற கவிதை நகைச்சுவையை முயல்கிறது. ‘எ ப்ரேயர்’ என்ற கவிதையில் சர்மா அவதாரங்களைப் பிரஸ்தாபிக்கிறார்.

தோரு தத் (1856-1877) சற்றுக் கூடுதலாக அறியப்பட்ட பெண் எழுத்தாளர். மற்ற கவிஞர்கள் சில மரங்களைப் பற்றி எழுதியிருப்பது போல இவர் சவுக்கு மரத்தைப் பற்றிக் கவிதை எழுதியுள்ளார். இந்த மரத்தின் அடியில் இளமைப் பருவத்தில் விளையாடியிருப்பதைக் குறிப்பிடுகிறார். தமிழச்சியின் ‘மஞ்சணத்தி’ நமது நினைவில் வந்து போகிறது. மஞ்சணத்தி மட்டுமல்ல, நற்றிணையின் புகழ்மிக்க கவிதை ஒன்றுகூட. ஒரு கருத்து, ஒரு காட்சி பல மொழிகளில் வெளிப்பட்டிருக்குமானால் அது உலகளாவியது என்று சொல்லலாம். வால்ட் விட்மனின் ‘யூ’ மரம், பெருமாள் முருகனின் ‘பனைமரம்’, நஞ்சுண்டனின் ‘விடுமுறை நாளில் அனுவாகம்’ முதலான கவிதைகளும் மனதில் நிழலாடுகின்றன.

இந்திய ஆங்கிலக் கவிதைகள் 19ம் நூற்றாண்டிலேயே தலைபோகிற விஷயங்களைப் பேசத் தொடங்கிவிட்டன என்பதற்கு ஜோசப் பர்த்தோ (1872-1947) கவிதைகளைக் குறிப்பிடலாம். இவர் கோல்ட்ஸ்மித் கவிதையில் ஆதர்சம் கொண்டவர். ‘பிராமணப் பெண்’, ‘பறைப் பெண்’, ‘தள்ளி வைக்கப்பட்ட மனைவி’ முதலான கவிதைகள் நமக்கு மகிழ்ச்சியைத் தருபவை.

இத்தொகுப்பில் மற்றொரு பிரபலமான கவிஞரின் கவிதை இடம்பெற்றுள்ளது. அவர் சரோஜினி நாயுடு (1879-1949). 1895ல் ஓர் ஆங்கிலேயர் சரோஜினி நாயுடுவிடம் ‘இங்கிலாந்தைப் பற்றி எழுதுவதை நிறுத்திவிட்டு இந்தியாவைப் பற்றி எழுதுங்கள்’ என்று சொன்னாராம். 1913ல் சரோஜினி நாயுடுவின் வீட்டுக்கு எஸ்ரா பௌண்ட் விருந்தினராக வந்திருக்கிறார். ஆனால் பௌண்டின் நவீனத்வ கவிதை முயற்சிகள் நாயுடுவைக் கவரவில்லை.

கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதிய தி. அண்ணாஜி நமது கவனத்தைப் பெரிதும் கவர்கிறார். இவர் யார், என்ன செய்தார் என்ற விவரங்கள் கிடைக்கவில்லையாம். ஆனால் இவர் 1912ல் துண்டுப் பிரசுரமாக வெளியிட்ட ‘த லைட் ஹவுஸ்’ என்ற கவிதை ஆச்சரியமாக இருக்கிறது. இக்கவிதையை 1912ல் விவேகானந்தா ப்ரஸ், மெட்ராஸ் வெளியிட்டிருக்கிறது. சென்னை கடற்கரையில் ஒரு கலங்கரை விளக்கம் இருப்பதைக் குறித்து ஒரு கவிஞரும் தமிழில் எழுதியிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அண்ணாஜி ஒரு நீண்ட கவிதையையே எழுதி வெளியிட்டிருக்கிறார். ‘தொலைவில் ட்ராம் வண்டிகளின் கிறீச்சிடல்களும் கடந்து செல்லும் வண்டித் தொடர்களின் சப்தமும்’ கேட்பதாக அண்ணாஜி எழுதுகிறார். மேலும்

மணலில் நூற்றுக்கணக்கானவர்கள்
குழுமுகிறார்கள். ஆனால்
அவர்கள் நடுவில் நான் தனியனாய்
உணர்கிறேன்

என்று அண்ணாஜி எழுதுகிறார். இவர் சொல்லும் கடற்கரை சென்னை உயர்நீதி மன்றத்திற்கு எதிரில் என்று தோன்றுகிறது. 1912ல் சென்னை உயர்நீதி மன்றத்தின் பிரதான கோபுரத்தில்தான் கலங்கரை விளக்கு அமைந்திருந்தது. அண்ணாஜியின் லைட்ஹவுஸ் அதுதான். அண்ணாஜி தேச விடுதலை உணர்வு கொண்டவர். கிறிஸ்துவ மத எதிர்ப்பும் உள்ளவர்.

என்னுடைய தேசத்தின் கடவுள்களை
என்னிடம் திருப்பிக் கொடுங்கள்

என்றும்

என்னுடைய கடவுள்கள்
என்னிடம் இறந்துவிட்டார்களா?
கிடையாது
அவர்கள் நெருப்பு மெல்லக் கனல்கிறது

என்றும் எழுதுகிறார் அண்ணாஜி. இவருடைய ‘த பாய்காட்’ என்ற கவிதை ஹிந்து நாளிதழில் 1906ல் வெளியாகியிருக்கிறது.

யூனிஸ் டி சௌஸாவின் தொகுப்பைக் கவனிக்கும்போது இந்தியக் கவிதையின் நவ உதயம் முதலில் ஆங்கில மொழியில் உருவாகியதென்றால் உண்மைதான். அண்ணாஜி பாரதிக்கு சமகாலத்தவர். தமிழின் நவீன கவிதை கூட முதலில் ஆங்கில மொழியில் உதயம் கொண்டதாகக் கூறலாம். அதுவும் ‘வசன கவிதை’. அதன் ஆசிரியர் யார்? நீங்கள் யூகிக்க முயல்வது போல சுப்ரமணிய பாரதியாரா? இல்லை.

Posted in கட்டுரை | Comments Off

படைப்பாளிகள் தங்கள் வாழ்க்கையிலிருந்து சில நிகழ்ச்சிகளை, செய்திகளை, போதங்களைத் தங்கள் படைப்புகளுக்கு தானமாகக் கொடுத்திருப்பார்கள். இந்த சுயசரிதை தானத்தை க.நா.சு., நகுலன், ஜி. நாகராஜன், அசோகமித்திரன், தி. ஜானகிராமன் இன்னும் பல எழுத்தாளர்களின் படைப்பிலே காணலாம். காளி-தாஸ் என்ற பெயரில் எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ் ‘மரபுகள்’ என்ற கவிதையில் இப்படியொரு சுயசரிதை தானம் செய்தவரோ என்று நினைக்கிறேன். ‘மரபு’ என்ற விஷயத்தில் எப்படி எல்லாம் சிந்தனை போகக்கூடும் என்றும் இக்கவிதையைக் கொண்டு பார்க்கலாம். மரபு என்ற தலைப்பில் உள்ள இக்கவிதை ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழத் திட்டமிட்டு அப்படியே வாழத் தொடங்குகிறார்கள்.

ஆன்றோர் யாரும்
தாம்பூலம் மாற்றிக்கொள்ளவில்லை
நானும் அவளும் தீர்மானித்தோம்
இணைந்து
கணவன் மனைவியாய் வாழலாம்

கவிதையின் முதல் வரியே இக்கல்யாணம் வீட்டுப் பெரியவர்கள் முடிவு செய்த கல்யாணம் இல்லை என்று சொல்லிவிடுகிறது. ‘ஆன்றோர்’ இக்கல்யாணத்தில் சம்பந்தப்படவில்லையாதலால் இது மரபுக்கு ஏற்புடையதல்ல என்றாகிவிட்டது. ‘கல்யாணநிகழ்ச்சி’ கிடையாது; அழைப்பிதழ் கிடையாது; சத்திரம், வரவேற்பு. விருந்து கிடையாது. மாலை மாற்றம் கிடையாது. கூரைப் புடவை இல்லை. தாலியும் கிடையாது. ஆனால் அவர் ‘நண்பர்களிடம் மனைவியாய்’ அறிமுகம் செய்கிறார். ஆனால் நண்பர்கள்

வாழ்த்தவில்லை யாரும் வாய் திறந்து
அவளை பற்றிய விபரங்களும் கோரவில்லை.

காளிதாஸ் இந்த நண்பர்களைப் பற்றிப் பொருமுகிறார். ஊர் கூடி தாலி கட்டிக் கல்யாணம் செய்துகொண்டவர்களுக்கென்றால் இவர்கள் மேடையேறிப் பரிசு கொடுப்பார்கள். போட்டோ  பிடித்துக்கொள்வார்கள். பரிமாறப்பட்ட இனிப்பைக் கண்டு முறுவலிப்பார்கள் என்று அவர்களது செயல்களைக் குறை போலக் கூறுகிறார் இந்த மனிதர். தன்னைப் பார்க்க வரவுமில்லை, பரிசு தரவுமில்லை என்கிறார் இக்கவிதையின் கடைசிப் பகுதிதான் காளிதாஸின் ஆத்திரம் எப்படிப்பட்டதென்று காட்டுகிறது.

எழுதும் கவிதைகளில் இவர்கள்
மரபுகள் வெட்டிச் சாய்த்தவர்கள்
மா கவிஞர்கள் – உண்மையில்
ஆயினும் பாவம்
தேடி வர இலக்கியப் பரிசு
காத்து நிற்போர்தான் ஜன்னலின் பின்னால்.

காளிதாஸ் கவிஞர்கள் என்று குறிப்பிட்டிருப்பது மரபை மீறிய கவிஞர்கள். அதாவது…? புதுக்கவிஞர்கள். இக்கவிஞர்கள் தாங்கள் எழுதும் கவிதைகளில் மரபுகளை வெட்டிச் சாய்த்தவர்கள். கவிதைகளில்தான் மரபுகளை வெட்டிச் சாய்த்தவர்களே தவிர நடைமுறை வாழ்க்கையில் அப்படிப்பட்டவர்கள் அல்லர் என்கிறது கவிதை.

கவிதையின் முதல் பகுதியில் அந்த மனிதரது ‘திருமணம்’ ஒரு நிகழ்ச்சி அல்ல என்று தெளிவாகக் கூறப்பட்டுவிட்டது. சேர்ந்து வாழ நினைத்ததாகக் கூறுபவர் அந்தப் பெண்ணை ‘மனைவி’ என்ற சொல்லைக் கொண்டுதான் அறிமுகப்படுத்துகிறார். கவிதையின் தொடக்கத்தில் பல ‘இல்லை’கள் கூறப்பட்டுள்ளன. இந்த நிலைமையில் ஒரு பெண்ணை

‘அழைத்துப் போய் நண்பர்களிடம்’

மனைவியாய் அறிமுகம் செய்தால் அந்த நண்பர்கள் எப்படி எதிர்ச் செயல்பட முடியும்? அழைத்துப் போய் என்றால் எங்கே அழைத்துப் போய்? ‘நண்பர்கள்’ எல்லோரும் ஓரிடத்தில் இருந்தார்களா? ஆமென்றால் எந்த இடத்தில் இருந்தார்கள்? அந்த இடம் நண்பர்கள் சும்மா இருந்துவிட்டதற்குக் காரணமாகிவிட்டிருக்குமா? மேலும் அந்த மனிதரை வாழ்த்தியிருக்க வேண்டும் என்று காளிதாஸ் விரும்புவது ஏன்? மரபு மீறுபவர்கள் என்பவர்களில் பலர் ஒரு மரபை மீறினாலும் வேறு சில மரபுகளைப் பின்பற்றுபவர்களாகவே இருப்பார்கள். ஒருவரை வாழ்த்துவதும் பரிசளிப்பதும் கூட மரபு வழிப்பட்டதுதானே. கல்யாண மனிதர் மறந்துவிட்டிருக்கிறார். இலக்கியப் பரிசைக் காத்து நிற்பதைக் கண்டிக்கத் தகுந்ததாகக் காட்டிக் கவிதை முடிகிறது. பெண்ணோடு சேர்ந்து வாழும் வகையை ஒருவர் தேர்ந்தெடுத்தது மரபு மீறல் ஆகுமா? ஆண்-பெண் சம்பந்தப்படாத நிகழ்வானால் அவரது மனோபாவம் எப்படியிருக்கும்? காளிதாஸ் இக்கவிதையில் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் திருமண சம்பந்தமான யதார்த்த நிலையைத் தெளிவாக்கியிருக்கிறார். வைதீகத் திருமணம் கூட இக்காலத்தில் வைதீகர்களுக்கு மட்டும் என்றில்லாமல் அது பல திருமண முறைகளில் ஒரு திருமண முறையாக மாற்றப்பட்டுவிட்டது. பிறப்பால் கிறிஸ்துவர்களாக இருந்தவர்கள் வைதீக முறைப்படி திருமணம் செய்துகொள்வதை யாரும் எதிர்த்துவிடவில்லை. இங்கும் மௌனம்தான் காக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய மணம் ஒரு நிகழ்ச்சியாக்கப்படுவதால் அந்த மரபுக்குரிய மற்ற விஷயங்கள் அதைச் சூழ்ந்துகொள்கின்றன.

காளிதாஸ் மரபு விஷயமாக வேறு சில செய்திகளைத் தனது கவிதையில் எழுதியிருக்கிறார். அதுவும் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.

Posted in கட்டுரை | Comments Off

ஐம்பெரும் பூதங்களைக் கணக்கிடும்போது ‘ஐப்பு’ என்று தொடங்குவார்கள். ‘ஐப்’ என்ற வடசொல்தான் தமிழில் ஐப்பு. அப்பு என்றால் தண்ணீர் என்று பொருள். ‘அப்பிலே தோய்த்திட்டு நாமதனைத் தப்பினால்’ என்று இரட்டைப் புலவர்களில் ஒருவர் பாடினார். ‘தண்ணீரில் தோய்த்து’ என்று இந்தத் தொடர் பொருள் தருகிறது. தமிழில் ‘அப்பழுக்கு’ என்ற தொடரும் உண்டு. அப்பழுக்கு என்றால் தண்ணீரால் ஏற்படும் கறை. துணியில் மற்ற மறைகளைப் போக்கினாலும் தண்ணீர் தனது கறையைத் துணியில் ஏற்றிவிடுகிறது. இந்த அப்பழுக்கைப் பற்றி வறுமை வசப்பட்ட இரண்டொரு சங்கப் புலவர்கள் தங்கள் பாட்டில் சொல்லியிருக்கிறார்கள். ‘என்னுடைய சிதார்’ – ஆடை ‘பாசி பிடித்தது போல் ஆகிவிட்டது. அதைக் களைந்து கொள்ள எனக்கு வேறு ஆடை மன்னன் கொடுத்தான்’ என்று ஒரு புலவர் பாடியிருக்கிறார். தனது ஆடையை மன்னனிடமிருந்தே புலவர் பெற்றதாகக் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தகுந்தது. ஆடை என்ற சொல் எப்போது அலங்காரம் என்ற சொல்லுடன் இணைந்து வரக்கூடியது. அப்படியே துணிமணி என்பதும் கூட. ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற பழமொழியும் உண்டு. வள்ளுவரும் நட்பைப் பற்றி எழுதும்போது ‘உடுக்கை’ பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். அருவி திருமாலின் உத்தரியம் போல் இருக்கிறது என்று ஒரு பக்தர் வர்ணித்திருக்கிறார். நல்ல ஆடை சீரான வாழ்க்கையைக் காட்டுவதாகவும் கந்தல் ஆடை வறுமையைக் காட்டுவதாகவும் கருதப்படுகிறது. சேலை கிழிவது போலக் கிழியக் கூடியதல்ல எனது பாட்டு என்று சீறினார் இடைக்காலத்து அவ்வையார்.

இந்திய ஓவியங்களும் சிற்பங்களும் அந்தந்தக் காலத்து மக்கள் அணிந்த ஆடைகளை சித்தரிக்கின்றன. கௌதம புத்தர், மகாவீரர் இவர்களது ஆடையை சிற்பங்கள் நன்றாக வெளிப்படுத்துகின்றன. இவர்கள் உடுத்தியிருப்பது போலவே பல நூற்றாண்டுகளாக இந்திய மக்கள் உடுத்தியிருந்தார்கள் என்று சொல்லலாம். தங்களின் ஆடையை வேட்டி என்றும் பெண்களின் ஆடையை ‘சேலை’ என்றும் குறிப்பிடுவது தமிழ்ப் பொது வழக்கு. வேட்டி எப்போதும் நிறமற்று வெள்ளையாகவே இருந்துவந்திருக்கிறது. பெண்களின் ஆடை வண்ணம் ஊட்டப்பட்டிருக்கிறது. ‘வண்ண நீலச் சிற்றாடை’ என்றார் அவ்வையார். ‘பட்டுக் கருநீலப் புடவை’ என்றார் பாரதியார். உடை அணிகிற முறையும் உடுத்தியிருப்பவரின் ஜாதியைக் காட்டுவதாகவும் இருந்தது. ஆசாரமாக இருக்கும்போது ஒருவிதமாகவும் சாதாரணமாக இருக்குக்ம்போது ஒருவிதமாகவும் வேட்டி இன்று உடுத்தப்படுகிறது. நீண்ட காலம் வரை வெள்ளையாக இருந்த வேட்டி ஏதோ ஒருகட்டத்தில் சாயம் ஏற்றப்பட்டிருக்கிறது. வேட்டி ‘சாய வேட்டி’ ஆயிற்று.

சாய வேட்டி வெள்ளை வேட்டியின் மையத்தில் பெரிய வட்ட வடிவமாக சிவப்பு நிறம் பூசப்பட்டதாக இருந்தது. சாய வேட்டி பல மக்களால் விரும்பப்பட்டு உடுத்தப்பட்டது. குறிப்பாக அம்மன் கோயில் பூசாரிகளால் உடுத்தப்பட்டது. க.நா.சு.வின் ‘பொய்த்தேவு’ நாவலின் கதாநாயகன் சோமசுந்தரம் தனது எஜமானனை சாய வேட்டி வாங்கித் தரும்படி கோருகிறான். சோமசுந்தரம் அப்போது சிறுவன். எனவே சிறுவர்களின் ஆசைக்குரிய வேட்டியாக இருந்திருக்கிறது சாய வேட்டி. ஆனால் சாய வேட்டி 1950க்குப் பிறகு தனது சிறப்பை இழந்துவிட்டது. சோமசுந்தரம் சாய வேட்டிக்கு ஆசைப்பட்டதாகக் கூறும் பொய்த்தேவு நாவல் 1940ல் எழுதப்பட்டது. 1960களின் இடையில் வரை இதை நான் மக்களிடம் பார்த்திருக்கிறேன். அப்புறம் மறைந்துவிட்டது. சாய வேட்டியை இலக்கியம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் நாட்டுப் பாடல் அதைக் கண்டுகொண்டதோடு பொருட்செறிவோடு பாடுகிறது.

சாய வேட்டி கட்டாதிய – ஒங்க
சதுரத்துக்கு  நல்லால்லே
வெள்ளை வேட்டி கட்டி வாங்க
வெளுப்பாருந்தா நல்லாருக்கும்

சாய வேட்டி கட்ட வேண்டாம் என்று மன்றாடுகிறாள் காதலி. இன்னும் ஒரு முறையும் அந்தப் பாட்டில் அதைச் சொல்கிறாள். சாய வேட்டிக்குப் பதிலாக ‘மல்லு வேட்டி’ கட்டும்படி அவள் சொல்கிறாள்.

சாய வேட்டி இன்று முற்றிலுமாக மறைந்துவிட்டது. வெள்ளை வேட்டிதான் ஆட்சி செய்கிறது. சுற்றிலும் கறுப்பாகவும் நடுவில் சிவப்பு வட்டமாகத் தெரியும் திராவிடர் கழகத்துக் கொடிபோல நடுவில் சிவப்புச் சுற்றலும் வெண்மையுமான சாய வேட்டியை இன்றைக்கு யார் கட்டுவார்? ஆடை என்ற ஒன்று நூற்றாண்டுகளாக மனிதனால் போற்றி அணியப்படுகிறது. இது தொடர்கிறது. அணிகலன்களுக்கும் இதே நிலைமைதான். கம்மல், தோடு, மிளிரும் காலத்தில் காதோலை அணியலாமா? கைவளையை விடத் தோள்வளை சங்க காலத்தில் கூடுதலாக மதிக்கப்பட்டதை நற்றிணைப் பாட்டொன்று சொல்கிறது. மாற்றங்களை ஏற்று ஒரு விஷயம் தொடர்வதைத்தான் மரபு என்கிறது தொல்காப்பியம். இப்படி விளக்குகிறார் நச்சினார்க்கினியர். நான்கு வகைப் பாக்களில் ஒன்றான கலிப்பாவில் வரும் ‘கொச்சகம்’ என்பது சொசுவம் என அறியப்பட்ட ஒன்றுதான் என்கிறார் உரையாசிரியர்.

‘மரபு’ என்பது அவ்வக்காலத்து மாற்றங்களை ஏற்றுக்கொண்டு – பழையன கழிந்து – செய்யுள் இயற்றுதல் என்கிறார் நச்சினார்க்கினியர். ‘செய்யுள்’ என்றுதானே அவர் சொன்னார் என்று யாராவது சொல்லக்கூடும். ஆம், சொன்னார். செய்யுள் என்றால் செய்யப்படுவது என்று பொருள். அதில் சீர் தளை வேண்டும் என்று சொல்லப்பட்டதில்லை.

மேலே நாம் பார்த்த நாட்டுப் பாடலில் காதலி கடைசியாக ஒரு வேண்டுகோள் செய்கிறாள்:

மதினி வார நேரமாச்சு
ஒத்த வேட்டிய கட்டாதிய…

மதினி என்பவள் மச்சினி. ஒத்த வேட்டி என்பது நான்கு முழ வேட்டி. அவள் ஏன் அப்படிக் கேட்டுக்கொண்டாள்? ஆடையின் அளவுக்கும் நல்ல நடத்தைக்கும் உள்ள தொடர்பை சுட்டிக்காட்டுகிறது நாட்டுப் பாடல். புரிகிறதா?

Posted in கட்டுரை | Comments Off

« Previous Entries