கண்ணைக் கவரும் மார்பகங்கள்
பார்ப்பதரிதாய்ப் போய்விட்டதென்று
சுற்றிலும் பார்த்தேன்
உயர்ந்த வெள்ளைத் துணிக்குள்
இரண்டில் வலது பொதிந்திருந்தது
அதன் மேல் ஆனால் ஒரு ஈ
சாமரம் போல மார்பசைந்தது
அசையாதிருந்தது நான்
இடத்தை விட்டுப் போக நேர்ந்தது
போய் விட்டிருக்குமா ஈ
நிச்சயம் போய்விட்டிருக்கும்: இல்லை
நிச்சயம் இருக்கும்: ஈ போய்விட்டிருக்கும்
ஈ போய்விட்டிருக்கும் நிச்சயம் கூடப்
பார்க்கப் படாத ஈ யூகத்தளவு தான்
கண்ணால் எடுத்துச் செல்லப்பட்ட
கண்ணைக் கவர்ந்த மார்பகத்தின் மேல்
என்றும் இருக்கிறது ஈ.
1982
Posted in கவிதை | Comments Off
திடீரென்று ஆனால்
சர்வ நிச்சயத்துடனே அன்று
தொடங்கிய எனது வாழ்வை
வியக்கிறேன் திரும்பிப் பார்த்து.
நான் அதைக் கேட்கவில்லை
எனக்காக யாரும் கேட்கவில்லை
என்பதுறுதி ஆனால்
ஏனது உண்டாயிற்று?
அவ் வேத கோஷத்தோடு
மழை மண்ணில் இறங்கும் போது
இவ் இது என் வாழ்க்கை வானி
லிருந்து பொட்டலம் போல் வீழ-
பொட்டல மான யானே என்னையே
பிரித்துப் பார்க்கும்
அதிசயம் இதன் பேரென்ன?
நிச்சயத்தோடு அன்று
வாழ்க்கையே தொடங்கிற் றென்றால்
எங்கிருந் தாரம்பம் என்று
தேடு மென் மடமை என்ன!
உலகெங்கும் பிரிப்பில்லாமல்
பொட்டல எருக்கங்காடு
புசுண்டகன் அலகுக் கூத்து
என்னை நான் பிரித்துப் பார்த்தேன்
விக்கித்துக் கண் கலுழ்ந்தேன்
கடவுளைக் கண்டேன் அந்தப்
பொட்டலத்தின் கால் விரித்த
ஒரு மூலைக் கோட்டில் நின்றார்
விரல்களால் என்னை மீன்போல்
தூக்கினார் வாய்க்குள் இட்டார்
ஆனந்தம் அவரை முந்தி
நான் சொன்னேன் அவர் சிரித்தார்
பொட்டலக் காட்டில் சர்வ
நிச்சயத் துடனே நின்றேன்
எப்படி உண்டாயிற்று
அது என்ற கேள்வியோடு.
1982
Posted in கவிதை | Comments Off
அன்பைத் தவிர வேறொரு செய்தி
விளம்பத் தகுந்ததாய் உலகிலே இல்லை
நீண்டதாய் எங்கும் செல்வதாய்
இருக்க வேண்டும் என் அன்பு
சக்கரம் பொருந்தி சுமையை
எல்லாப் பொழுதும் எதிர்பார்த்துக் கொண்டு.
1982
Posted in கவிதை | Comments Off