ஞானக்கூத்தன் படைப்புகள்

எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல்
வெளியில் சொல்லும் பழக்கம் எனக்கு
நண்பன் ஒருவனோ நேரெதிர் இதற்கு

ஒன்றையும் சொல்ல மாட்டான் எதற்கும்
மௌனமாய் இருப்பதே அவன் வழியாகும்
பலரும் சொன்னோம்
‘சொல்லப்படுதலே என்றும் சிறந்தது’
அதற்குப் பிறகும் அவன் சொல்லவில்லை.
நாங்கள் வியந்தோம்.

இறக்கும் பொழுதும் சொல்ல மாட்டானா
ஒருநாள் அவனும் இறந்தான்
கட்டைப் புகையிலை போல அவன்
எரிந்ததைப் பார்த்துத்

திரும்பும் பொழுது தெருவில் வெயிலில்
சேவல் கூவிற்று ஒருமுறை விறைத்து.
வழக்கம் போல நான் சொன்னேன்.
‘புலர்ந்தற் கப்புறமும் கோழிகள் கூவும்’

1981

Posted in கவிதை | Comments Off

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

1981

Posted in கவிதை | Comments Off

வரப்பு
காக்கிப் பயிர்
கம்பி குத்தி
நெட்டைக் கம்பம்
கேடயம்
வாள்
குறுக்கில் விரையும் பறவை
உதைக்கும் சப்தம்
சப்தத்தில் பூமி
ஒரு மீசை
பூசப்பட்ட வானம்
நகராத புரவி
நகர்ந்து போன பகை
நெல்லுப்பயிர்
கள்ளு குடி
குளத்துப்படிக்
கட்டில் வெட்டுப்
புண்ணில் சொட்டு
ஸ்வஸ்தி ஸ்ரீ
ராஜாதி ராஜர்க்கு
யாண்டு…
யாண்டு?
அல்லிப் பூவில்
ரத்தக கறை
சூரியனின்
சேப்புத் தலை
தோப்பு
தெம்மாங்கு
தலை முழுகிய
தண்ணீர்
அலை இடி
அலை இடி
அலை
தலை
அலை
தலை
அலை
தலை
அலை
பொம்மைக் குதிரை
ஆசைப்பட்டுக் கனைச்சு
வர்ணம் உதிர்ந்து போச்சு

1981

Posted in கவிதை | Comments Off

« Previous Entries