மழை நாள்த் திவசம்
தாத்தாவுக்குத் தந்தை
செய்தது.
வீட்டுக் குள்ளே
பெரிய காலித்
தகர டப்பியில்
காற்றின் பேச்சு
கண்ணை மூடிக் கொண்டு
நடக்கும் பழக்கம் உள்ள நான்
ஆசாரத்தை அஞ்சி வீட்டின்
பின் பக்கம் வந்தேன்
கொல்லைச் சுவரின்
புராதன ஈரத்தில்
பளபளக்கும் சுவடு வைத்து
ஊர்ந்தது நத்தை ஒன்று
நத்தைக்குத் தெரியாதா
செங்குத்துச் சுவரென்று
மீண்டும் ஊர்ந்தது
மீண்டும் விழுந்தது
திவசச் சோற்றுக்குக்
காத்திருக்கும் தேவதைகள்
நத்தையைப் பிடித்துதள்ளி
விளையாடுகிறார்கள் பொழுது போக
இன்றும் திவசம்
மழைநாள்த் திவசம்
கடனுக்கும் பட்டினிக்கும் மான
பங்கத்துக்கும் கண்ணீர்
சுரக்காத தந்தை
குலுங்கி அழுது மனம் தேறி
புலன் அடங்கிய திருநாள்
தீ முன் அமர்ந்தேன்
தாத்தாவின் பெயரோடு
தந்தையின் பெயரைப்
பார்ப்பார் சேர்த்தார்
பாத்திரத் தண்ணீரை
மற்றொன்றுக்கு நான்
பாம்புக் கரண்டியால்
மாற்றி ஊற்றுகையில்
முற்றத்துச் சுவரில்
விரலே உடம்பாகி
அதுவே காலான ஒரு சின்ன நத்தை.
1978
Posted in கவிதை | Comments Off
இரண்டு விரல்களுக்கிடையில்
எச்சிலைக் காறித் துப்பிய
ஒணசல் மனிதன்
நுகத்தடியில் தன்னை மீண்டும்
பொருத்திக் கொள்கிறான்
சிறிய காற்றுக்கும் பெரிதும் அசைந்தன
சிறு மரங்கள்
உலோகத் தட்டில் உணவை முடித்து
வீட்டுக்குள்ளேயே கையைக் கழுவி
மதியத் தூக்கத்தில் சிலபேர் தங்களை மறந்தனர்
வேம்பில் பழக் குலையை எட்டிப் பிடித்துக் காக்கைகள்
ஒற்றைப் பழத்தை ஈர்த்துச் சுவைத்தன
இடித்துக் கட்டப்படும் வீடுகள்
முக்கோண வட்டச் சிதறலாய்க் கவிழ்ந்து
மீண்டும் எழுந்தன விண்ணில்
குறுக்கு நெடுக்கு
வளைவில் நெடுக்கு நெடுக்கில் வளைவு
சதுர வட்டக் கோண மயக்கம்
தூண்கள்
தூணில் துளை
துளையில் புகை
கம்பிக் கதவுகள் எந்திரச் சங்குகள்
கட்டிட நிழலில் கார்களின் வரிசை
தணிந்த சூட்டுத்தூறல் நடுப்பகலில் நினைத்தேன்
ஆண்டுகள் முப்பதுக்கு கீழே ஒரு நாள்
கேள்விப்பட்ட விடுதலை என்னும் கட்டுக்கதை
கூடவே இன்னமும் தொடர்ந்து வளர்ந்து
ஒருநாள் மெய்யாய்த் துடிக்கக் கூடுமோ?
1978
Posted in கவிதை | Comments Off
என் உலகம் சிறியது
அங்கே
மூங்கில் ஆல் ஆன வேலி ஒன்றும்
அந்த வேலிஇல் இருக்கும் ஓணான் ஒன்றும்
உண்டு ;
குச்சிப் பூச்சியும் ஒன்றுண்டதிலே
வீட்டுக்கும் இல்லை;
வீட்டுப் பக்கம் வளர்ந்து
கனியாத மரத்துக்கும் இல்லை வேலி
வேலியைப் போட்டதும் நானில்லை
மரத்தைப் பற்றி கூறினேன் அல்லவா?
இன்னும் ஒன்றைச் சொல்லணும்
மரத்தின் கிளையில் தொங்கும்
கூடொன்றுண்டு. பழங்கூடு
இத்தனை சொன்ன பின் எனது
உலகம் எப்படிச் சிறிய தென்று
யாரேனும் என்னைக் கேட்கக் கூடுமோ
எனது உலகம் சிறியது
ஓணானும் குச்சிப் பூச்சியும்
வேலிப் படலில் காணாத போது நான்
கூட்டுக்குப் போய்விடுவேன்: ஏனென்றால்
அங்கே எனக்குச் சூரியன்
அந்தியைக் காட்டுவான் அணுவளவாக
1978
Posted in கவிதை | Comments Off