ஊருக்கெல்லாம் கோடியிலே
முந்திரிக் கொல்லே
உக்காந்தால் ஆள்மறையும்
முந்திரிக் கொல்லே
செங்கமலம் குளிச்சுப்புட்டு
அங்கிருந்தாளாம்
ஈரச்சேலை கொம்பில் கட்டி
காத்திருந்தாளாம்
நாட்டாண்மைக்காரன் மகன்
அங்கே போனானாம்
வெக்கப்பட்டு செங்கமலம்
எந்திரிச்சாளாம்
நாட்டாண்மைக்காரன் மகன்
கிட்டே போனானாம்
வெக்கப்பட்டு செங்கமலம்
சிரிச்சிக்கிட்டாளாம்
உக்காந்தால் ஆள்மறையும்
முந்திரிக் கொல்லே
ஊருக்கெல்லாம் கோடியிலே
முந்திரிக் கொல்லே.
1972
Posted in கவிதை | Comments Off
காடெ கோழி வெச்சுக்
கணக்காக் கள்ளும் வெச்சு
சூடம் கொளுத்தி வெச்சு
சூரன் சாமி கிட்ட
வரங்கேட்ட வாரீங்களா
ஆரோ வடம் புடிச்சி
அய்யன் தேரு நின்னுடுச்சி
கற்கண்டு வாழெ வெச்சு
விருட்சீப் பூவ வெச்சுப்
பொங்கல் மணக்க வெச்சு
வடக்கன் சாமி கிட்ட
வரங்கேட்ட வாரீங்களா
ஆரோ வடம் புடிச்சி
அய்யன் தேரு நின்னுடுச்சி
இளநீ சீவி வெச்சு
இரும்பாக் கரும்ப வெச்சுக்
குளிராப் பால வெச்சுக்
குமரன் சாமி கிட்ட
வரங்கேட்டு வாரீங்களா
தெரு ஓடும் தூரமின்னும்
வடமோடிப் போகலியே
வடம்போன தூரமின்னும்
தேரோடிப் போகலியே
காலோயும் அந்தியிலே
கண் தோற்றம் மாறையிலே
ஆரோ வடம் புடிச்சி
அய்யன் தேரு நின்னுடுச்சி
தெரு ஓடும் தூரமின்னும்
வடமோடிப் போகலியே
வடம்போன தூரமின்னும்
தேரோடிப் போகலியே
காலோயும் அந்தியிலே
கண் தோற்றம் மாறையிலே
ஆரோ வடம் புடிச்சி
அய்யன் தேரு நின்னுடுச்சி
1972
Posted in கவிதை | Comments Off
வயல்களைக் குளங்களென்று
நினைத்திடும் மீனும் நண்டும்
குசலங்கள் கேட்டுக் கொள்ளும்
கொய்கிற அரிவாளுக்குக்
களைவேறு கதிர்வேறில்லை
என்கிற அறிவை இன்னும்
வயல்களோ அடையவில்லை
மீனுடன் நண்டும் சேறும்
நாற்றிசைக் கரையும் பார்த்துக்
குளத்திலே இருப்பதாகத்
தண்ணீரும் சலனம் கொள்ளும்
பறைக்குடிப் பெண்கள் போல
வயல்களில் களைத்துத் தோன்றும்
பெருவிரல் அனைய பூக்கள்
மலர்த்தும் சஸ்பேனியாக்கள்
படுத்தவை கனவில் மூழ்கி
நிற்பவையாகி எங்கும்
எருமைகள். அவற்றின் மீது
பறவைகள் சவாரி செய்யும்
சரி
மனை திரும்பும் எருமைமேலே
எவ்விடம் திரும்பும் காக்கை?
1972
Posted in கவிதை | Comments Off